சமயம் சட்டமானது! சட்டம் சமயமானது! உரிமையை பறிக்க அரசியல் சட்ட மாற்றம்

கி. சீலதாஸ், செம்பருத்தி.காம்  (கட்டுரைத் தொடர்ச்சி பகுதி 2) 

maha1ஜனாநாய  முறைப்படி  பார்க்கும்போது  நீதி  அதிகாரம்  நீதிமன்றங்களிடம்  இருக்க   வேண்டுமென்பது  ஏற்றுக்  கொள்ளப்பட்ட  ஒரு  சித்தாந்தமாகும்.  அரசியல்  சட்டத்தில்  நீதி  அதிகாரத்துக்கு  முக்கியத்துவம்  கொடுத்ததானது  மலேசியா  நீதித்  துறை  சுதந்திரத்தையும்  உறுதிப்படுத்துகிறது   என்பதை   வெளிப்படுத்துவதாகவே  கருதப்பெற்றது.  ஆனால்,  10.6.1988இல்  துன்  டாக்டர்  மகாதீர்  முகம்மது  அவர்களின் அரசு  121(1)ஆம்  சரத்தில் திருத்தத்தை  கொண்டுவந்தது.  நீதி  அதிகாரம்  உயர்நீதிமன்றங்களிடம்   இருக்கும்  என்ற  சொற்களை  நீக்கிவிட்டு, “இரண்டு  உயர்நீதிமன்றங்கள்   அமைக்கப்பெறும்”  என்று மட்டும்  குறிப்பிட்டது. (There  shall  be  established  two  High  Courts…)

இந்தத்  திருத்தத்தோடு  மகாதீர்  அரசு  நின்றுவிடவில்லை.  மேலே  ஒருபடி  சென்று  ஒரு  புது  துணை  சரத்தை  திணித்தது.  நீதிமன்றங்களுக்கு  உட்பட்ட  விவகாரங்களில்  உயர்  நீதிமன்றங்களுக்கு  அதிகாரம் இல்லை  என்பதாகும்.

இந்தத்  திருத்தங்கள்  முஸ்லிம்  அல்லாதாருக்குப்  பல  இடர்பாடுகளை  ஏற்படுத்தியது.  முஸ்லிம்  அல்லாதார்  நெருக்கடியான  சட்ட  நிலையை  அடைந்தனர்.  சட்டத்தின்   வலிமையிலும்,  அதன் தரமான  தன்மையிலும்  நீதி  பரிபாலத்தில்  நேர்மையும்,  தூய்மையையும்  நம்பிக்கைக்   கொண்டே  எல்லோரும், முஸ்லிம்  சட்ட  நிபுணர்கள்  உட்பட,  ஏற்படுத்தப்  பெற்றத்  திருத்தங்களைப்  பார்த்து  வேதனை  அடைந்தார்கள்.

121(1) மாற்றம் மனிதபிமானமற்றது

civil 1 121(1)ம்  சரத்தில்  ஏற்படுத்தப்  பெற்ற  திருத்தம்  எவ்வாறு  முஸ்லிம்  அல்லாதாரைப்  பாதித்தது,  பாதிக்கிறது  என்பதை  ஆய்ந்து  பார்க்கும்போது  விவேகமான, தரமான  ஆய்வு  தேவை  என்பதை  உணர்வதோடு,  எழுந்துள்ள  பிரச்சினையைச்  சமயக்  கண்களோடு  பார்ப்பதைக்   காட்டிலும்  மனிதாபிமானத்தோடு  அணுகுவதே  மேல்.  இதுவே  முன்னேற்றமான   மனப்பக்குவத்தை  வெளிப்படுத்துவதாகும்.  இவ்வாறு  ஆய்வு மேற்கொள்வதால்  இஸ்லாத்துக்கு  எதிராக நாம்  எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை;  மாறாக  திணிக்கப்பட்ட   மாற்றங்களால்  விளைகின்ற  குறைபாடுகளைத்   தான்  நாம்  கவனத்தில்  கொள்கிறோம்,  விவாதிக்கிறோம்,  எடுத்துக்காட்டி  மனிதநேய  ரீதியில்  பரிகாரம் தேடுகிறோம்,  கோருகிறோம்.

மலேசிய இஸ்லாமிய நாடா?

civil 2முதலில்  1988ஆம்  ஆண்டுக்கு  முன்பு  இருந்த  121(1)  சரத்தின்  நிலையைக்  கவனிக்க வேண்டும்.  இரண்டாவதாக  1988ஆம்  ஆண்டுக்குப்  பிறகு,  அரசியல்  சட்டத்தின்  121(1)  சரத்தில்  செய்யப்பட்டத்  திருத்தங்களை  மனதிற்கொண்டு  நீதிமன்றங்கள்  மேற்  கொண்ட  அணுகுமுறையைக்  கவனிக்க  வேண்டு;  மூன்றாவதாக  121(1A)ம்  சரத்து  விளைவித்த  சட்ட நெருக்கடி;  நான்காவதாக  அரசியலமைப்புச் சட்டத்தின்  121(1A)  சரத்துக்கு  இன்று  கொடுக்கப்படும்  வியாக்கியானம்;  ஐந்தாவதாக  மலேசிய  இஸ்லாமிய  நாடு  என  மஹாதீர்  முகம்மது  அரசு  அறிவித்தது.  இவையாவும்  சட்ட அமலாக்கத்தில்  குழப்ப  நிலை  ஏற்படுவதற்குக்  காரணமாக  இருந்துள்ளன  என்பதை  காணமுடிகிறது. இவற்றை  எல்லாம்  அலசிப் பார்க்க  வேண்டுமானால் சில  அடிப்படை சரித்திர  உண்மைகளைக்  கவனத்தில்  கொண்டால்  பலனளிக்கும்.

மாட்டிக்கொண்ட மக்களும் தீர்வற்ற நிலையும்   

இந்த ஆய்வானது  சமயத்  துவேஷத்தை  வளர்க்கும்  நோக்குடனோ  அல்லது  அப்படிப்பட்ட  ஒரு  சூழ்நிலை  உருவெடுக்க  வேண்டுமென்ற  அடிப்படையில்  மேற்  கொள்ளப்படுவதல்ல.  நம்  அடிப்படை  நோக்கம்  எல்லா  மலேசியர்களும்,  அவர்கள்   எந்தச்  சமயத்தைச்  சார்ந்தவர்களாக  இருப்பினும்  நல்லிணக்கத்தோடு   வாழ   வேண்டுமென்பதாகும்.  இந்த  நோக்கத்தில்  அரசும்  அக்கறை  கொண்டிருப்பதை  மறுக்கமுடியாது.  ஆய்வு செய்யும்போது,  அதிலும்  உண்மை  நிலவரங்களை  ஆய்வு  மேற் கொள்ளும்போது பல   கசப்பான  அனுபவங்களைக்  காணமுடியும்.

civil3மனிதாபமானத்தில்  ஊறிப்போன  மலேசியர்கள்,  சக   மலேசியர்கள்,  அவர்கள் யாராக இருந்தாலும்,  எந்த  இனத்தையோ  சமயத்தையோ  சார்ந்திருந்தாலும்  அவர்கள்  படும்  அவதியை  மனிதநேயக்  கண்களோடு  பார்த்து,  எழுந்துள்ள  பிரச்சினைகளுக்குப்   பரிகாரம்  காண்பார்கள் –காண  வேண்டும்.  இந்தப் போக்கை  முதிர்ந்த  மனப்பக்குவத்தை   வெளிப்படுத்தும்  தரத்தைக்  கொண்டது  எனலாம்.  அதே   மனப்பக்குவத்தைத்தான்  சட்டத்தால்  விளைகின்ற  சங்கடங்களை  நீக்க வேண்டும்,  நீக்குவதற்கான  பரிகாரம்  தேடவேண்டுமென்பது.

– தொடரும்.

பகுதி 1 – குழப்பத்திற்கு யார் காரணம்