டிஏபி மறு தேர்தல் ‘பழைய’ வேட்பாளர் பட்டியல் அடிப்படையில் இருக்கக் கூடும்

limசங்கப் பதிவதிகாரி (ஆர்ஒஎஸ்) நெருக்குதல் கொடுத்த டிஏபி கட்சியின் மறு தேர்தல் நடவடிக்கை பெரும்பாலும் ‘பழைய வேட்பாளர் பட்டியல்’ அடிப்படையில்  இருக்கக் கூடும் என அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்  கூறியிருக்கிறார்.

மறு தேர்தலை நடத்தும் முறை குறித்த விவரங்களை முடிவு செய்வதற்காக வரும்  வியாழக் கிழமை கட்சியின் மத்திய நிர்வாகக் குழு கோலாலம்பூரில் கூடும் போது  ஒரு முடிவு எடுக்கப்படும் என அவர் மேலும் சொன்னார்.

என்றாலும் கடந்த ஆண்டு பேராளர்கள் முன் மொழிந்த அதே வேட்பாளர்கள்  தேர்தலில் போட்டியிடுவார்களா என்பதை உறுதி செய்ய லிம் மறுத்து விட்டார்.

“நான் எதனையும் முன் கூட்டியே சொல்ல விரும்பவில்லை. வியாழக் கிழமை  நாங்கள் கூடி அந்த விவகாரம் மீது முடிவு செய்வோம்,” என பினாங்கு  முதலமைச்சருமான அவர் நேற்று கூறினார்.

அவர் மலேசியாகினி உட்பட பல ஆங்கில மொழி நாளேடுகளுக்கு கூட்டாக  பேட்டி அளித்தார்.