கலந்துரையாடல் நடத்த அன்வார் முன் வந்ததை அம்னோ நிராகரிக்கிறது

adnanஎதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில்  விவாதிக்கப்படுவதற்குத் தேசியப் பிரச்னைகள் ஏதுமில்லை என அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் சொல்கிறார்.

“எல்லாம் வெறும் அரசியல். அன்வார் விவாதம் நடத்த விரும்பினால் அதனை  நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.”

“அவரைப் பொறுத்த வரையில் எல்லாம் அரசியலே. இப்போது ஏன், அவர்கள்  தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளவில்லை. தேர்தல் ஆணையத்தையும்  ஏற்கவில்லை ?”

தெங்கு அட்னான் புத்ராஜெயா ஏரி படகுப் பயணத்தின் 10வது ஆண்டு நிறைவுக்  கொண்டாட்டங்களை நேற்று தொடக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் நடவடிக்கைகளில் உண்மையாக இருப்பதில்லை.  சொன்ன வார்த்தகைகளையும் காப்பாற்றுவதில்லை என்றும் அவர் சொன்னார்.

மெர்தேக்கா உணர்வின் அடிப்படையில் ‘தேசியப் பிரச்னைகள்’ மீது
அரசாங்கத்துடன் கலந்துரையாடல் நடத்த அன்வார் முன் வந்துள்ளது குறித்து  தெங்கு அட்னான் கருத்துரைத்தார்.