அமைச்சர்: பிஎம்-முக்குக் கூடுதல் வகுப்புகள் ஏற்பாடு செய்ய தாய்மொழிப் பள்ளிகள் இணக்கம்

1 blueprintதாய்மொழிப் பள்ள்ளிகள் தேசிய கல்வி செயல்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதுடன் பஹாசா மலேசியா கற்பிக்கக் கூடுதல் நேரத்தை  ஒதுக்கவும் ஒப்புக்கொண்டுள்ளன எனக் கல்வி அமைச்சர் முகைதின் யாசின் கூறினார்.

பஹாசா மலேசியா பாடத்துக்கான நேரத்தை வாரத்துக்கு 180 நிமிடங்களிலிருந்து 270 நிமிடமாகக் கூட்டுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

ஆனால், சீனர் சங்கங்கள் அதை ஏற்கவில்லை என்பதால் அரசாங்கம் அதற்கான நேரத்தை 240 நிமிடங்களாகக் குறைத்துக்கொண்டது.  இது, இப்போது உள்ளதைக் காட்டிலும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கூடுதலாகும். துணைப் பிரதமருமான முகைதின் கல்வி செயல்திட்டத்தை அறிமுகம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

தமிழ், சீனப் பள்ளிகள் இரண்டுக்குமே இது பொருந்தும்.

கடந்த செப்டம்பரில் செயல்திட்டத்தின் முதலாவது வரைவு வெளியிடப்பட்டபோது சீனர் சங்கங்கள் ஆட்சேபணை தெரிவித்த விசயங்களில் இதுவும் ஒன்று.

அதன்பின்னர் ஒரு சமரசம் காணப்பட்டது.

“எந்தெந்த விசயங்கள் குறித்து ஆட்சேபணை எழுப்பப்பட்டதோ அவற்றுக்கெல்லாம் தீர்வு காணப்பட்டு விட்டது”,என்றாரவர்.

“இனி, எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கப்படக்கூடாது”.

தாய்மொழிப் பள்ளிகளில் பஹாசா மலேசியா கற்பிக்கக் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்னும்போது தாய்மொழிகளுக்குப் பதிலாக அதைக் கற்பிக்க வேண்டும் என்பது பொருளல்ல என்பதை முகைதின் வலியுறுத்தினார்.

தாய்மொழிப் பள்ளிகளுக்கும் தேசியப் பள்ளிகளுக்குமிடையில் பஹாசா மலேசியா தேர்ச்சியில் நிலவும் இடைவெளியைக் குறைப்பதே அந்நடவடிக்கையின் நோக்கமாகும் என்றவர் விளக்கினார்.