மலேசியாவில் பதிவாகும் காசநோய் (Tuberculosis) பாதிப்புகளில் 85 சதவீதம் உள்ளூர் மக்களே என்றும், வெளிநாட்டினர் 15 சதவீதத்தினர் மட்டுமே என்றும் சுகாதார அமைச்சின் தரவுகள் காட்டுவதாக அமைச்சர் சுல்கிப்லி அகமது தெரிவித்துள்ளார்.
இந்நோய் பரவுவதற்கு புலம்பெயர்ந்தோரே முதன்மைக் காரணம் என்ற கருத்தை நிராகரித்த அவர், சமூக ரீதியாக நோய் பரவும் அபாயத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் எச்சரித்தார்.
நமது பொதுச் சுகாதாரச் சூழலில் காசநோய் என்பது புதியதல்ல, இது பல ஆண்டுகளாக இருந்து வருவதுடன், நம்மிடையே ஒரு தொற்றாகவும் நீடிக்கிறது. எனவே, அனைத்துத் தரப்பினரும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
மேலதிக தகவல்களை மலேசிய சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கலாம்.
இது ஒரு மருத்துவச் சிக்கல் மட்டுமல்ல; நெரிசலான வாழ்க்கைச் சூழல் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற சமூக-பொருளாதாரக் காரணிகளாலும் இந்தத் தொற்று ஏற்படுகிறது,” என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
காசநோயை உண்டாக்கும் ‘மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்’ கிருமி மிகவும் பிடிவாதமானது. இருப்பினும், ஒரு நற்செய்தி என்னவென்றால், நோயை முன்கூட்டியே கண்டறிந்து, குறைந்தது ஆறு மாதங்களுக்கு நோயாளிகள் தங்களின் ஆன்டிபயாடிக் சிகிச்சை முறையைச் சரியாகப் பின்பற்றினால், இத்தொற்றைத் தடுத்து, குணப்படுத்தி, முழுமையாகக் குணமடையச் செய்ய முடியும்,” என்று அவர் கூறினார்.
இருவாரங்களுக்கு மேலாக நீடிக்கும் இருமல், காய்ச்சல், இரவு நேரங்களில் வேர்த்தல் அல்லது உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், உடனடியாக மருத்துவமனைகளை நாடி சிகிச்சை பெற வேண்டும் என்றும் சுல்கிஃப்லி வலியுறுத்தினார்.
மேலும், காசநோயாளிகளைப் புறக்கணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்திய அவர், நோயாளிகள் தங்களது சிகிச்சையை முழுமையாக முடிப்பதை உறுதி செய்ய அவர்களுக்குத் தேவையான உளவியல் ஆதரவை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காசநோய்க்கான பிசிஜி (BCG) தடுப்பூசியைச் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதோடு வீடுகளில் போதிய காற்றோட்ட வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நடப்பு ஆண்டின் 5-வது தொற்றுநோயியல் வாரம் வரை நாடு முழுவதும் 503 புதிய காசநோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,571 ஆக உயர்ந்துள்ளதாகவும் திங்கட்கிழமை அமைச்சு தெரிவித்தது.
மாநில வாரியாக அதிகபட்சமாக சபாவில் 614 பாதிப்புகளும், அதனைத் தொடர்ந்து சிலாங்கூரில் 476, சரவாக்கில் 257, ஜோகூரில் 233 மற்றும் கோலாலம்பூர் புத்ராஜெயாவில் 202 பாதிப்புகளும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-fmt
























