மலேசிய எல்லை மற்றும் கட்டுப்பாட்டு பாதுகாப்பு முகமையின் (MCBA) தளபதி நாசருதீன் நாசிர் பயணித்த வாகனம், இன்று அதிகாலை மலேசிய-தாய்லாந்து எல்லைக்கு அருகே புகித் காயூ ஈத்தாம் (Bukit Kayu Hitam) பகுதியில் துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளானது.
அதிகாலை 5.40 மணியளவில், எல்லையிலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் நடந்த இந்த தாக்குதலில் தளபதி காயமின்றி தப்பினார் என்று கெடா காவல்துறைத் தலைவர் அட்லி அபு ஷா தெரிவித்தார்.
மஸ்ஜித் அல் முஹாஜிரினில் சுபுஹ் தொழுகை நடத்துவதற்காக தளபதி சென்று கொண்டிருந்தபோது, கருப்பு நிறத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர், இருவரும் முழு முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணிந்தபடி, அவரது காரை நோக்கி வந்ததாக அவர் கூறினார்.
“சந்தேக நபர்களில் ஒருவர் இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தி, காரின் பின்புற வலது கதவு மற்றும் முன்பக்க பயணி கதவைத் தாக்கினார். அதிர்ஷ்டவசமாக, பாதிக்கப்பட்டவருக்கு காயம் ஏற்படவில்லை,” என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு நடந்த உடனேயே, தனியாக வாகனம் ஓட்டிச் சென்ற பாதிக்கப்பட்டவர், சந்தேக நபர்களை சுமார் 1 கி.மீ தூரம் பின்தொடர்ந்து செல்ல முயன்றதாகவும், பின்னர் அவர்கள் அருகிலுள்ள தொழில்துறை பகுதிக்குள் தப்பிச் சென்றதாகவும் அட்லி கூறினார்.
கெடா காவல்துறை தலைவர் அட்ஜ்லி அபு ஷா

“பின்னர் அவர் தனக்குச் சொந்தமான புரோட்டான் X70 காரை குடிவரவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு (ICQS) வளாக காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க ஓட்டிச் சென்றார்,” என்று அவர் கூறினார்.
நடப்பாண்டில் புக்கிட் காயு ஹீத்தாம் மலேசியக் எல்லைக் கட்டுப்பாட்டு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (MCBA), 100 டன் அரிசி மற்றும் பன்றி இறைச்சி உட்பட பல வெற்றிகரமான பறிமுதல்களை மேற்கொண்டது. இதன் காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில், எல்லைப் பகுதியில் செயல்படும் குற்றச் கும்பல்கள் பழிவாங்கும் நோக்கில் இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தையும் உள்ளடக்கி, காவல்துறை அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாக அட்லி தெரிவித்தார்.
அப்பகுதியில் பல கடத்தல்காரர்கள் மற்றும் குடியேறிகளையும் போலீசார் தடுத்து வைத்துள்ளனர், பாதிக்கப்பட்டவர் ICQS வளாகத்தில் பணிகளுக்குப் பொறுப்பானவர் என்றும் அவர் கூறினார்.
எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்றாலும், மரணம் அல்லது காயத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் துப்பாக்கியை இயக்கியதற்காக, துப்பாக்கிகள் (அதிகரித்த தண்டனைகள்) சட்டம் 1971 இன் பிரிவு 3 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
























