அருள் மக்களுடன் கலந்துரையாடுவதே முக்கியமாகும்-புவா

1mdb1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனத்தைக்  குறைகூறுவோர்  பலர் உண்டு. அவர்களில் கடுமையாகக்  குறைகூறுவது யார்  என்று  பார்த்தால்  அது  டிஏபி  எம்பி  டோனி  புவா-வாகத்தான்  இருக்கும்.

இதை அந்த  நிறுவனமும்  அறியும். அதனால்தான்  அந்த  பெட்டாலிங்  ஜெயா   உத்தாரா  எம்பியை  ஒரு   கலந்துரையாடலுக்கு  அழைத்திருக்கிறார்  1எம்டிபி-இன்  புதிய  தலைவர்  அருள்  கந்தா.

அந்த  அழைப்பை  ஏற்ற புவா இன்னொன்றையும்  சொன்னார்.

“1எம்டிபி-யுடன்  அல்லது  அருளுடன்  பேசுவது  எனக்கு  மகிழ்ச்சியே. ஆனால், அவர்  பொதுமக்களுடனும்  பேசுவது  அதைவிட  முக்கியம்”, என   மலேசியாகியிடம்   புவா  தெரிவித்தார்.

பொது உறவை  மேம்படுத்திக்கொள்ள  விரும்பும்  அருள்,  ஒரு  விவகாரத்தைத்  தெளிவுபடுத்தத்  தவறிவிட்டதாகவும்  புவா  கூறினார்.

1எம்டிபி-இன் பணம்  “மீட்டுக்கொள்ளப்பட்டது”  என்றால்   பணம்  கைக்கு  வந்து  கிடைத்து  விட்டதாகப் பொருள்படுமா  என  புவா  கேட்டிருந்தார். அந்தக்  கேள்விக்கு  விடை அளிக்கப்படவில்லை  என்பதைத்தான்  புவா  அவ்வாறு  குறிப்பிட்டிருந்தார்.