நஜிப்பின் அரசியல் நிதி திட்டம்: எதற்கு?, கேட்கிறார் மகாதிர்

 

mnajibspoliticalfundingபிரதமர் நஜிப் அறிவித்துள்ள அரசியல் நிதி விதிமுறைக்களுக்கான ஒரு தேசியக் குழு தேவையற்றது என்று முன்னாள் பிரதமர் மகாதிர் கருதுகிறார்.

“இது குழுக்கள் அமைப்பது பற்றியதல்ல. ஆகவே, குழுக்கள் அமைக்க வேண்டிய தேவையில்லை.

“அப்படியே (அவர்கள்) அவரை (நஜிப்பை) விசாரித்தாலும், அது தூக்கி எறியப்படும்”, என்று மகாதிர் கூறியதாக த மலேசியன் இன்சைடர் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியல் நிதி என்று கூறப்படும் ரிம2.6 பில்லியன் சம்பந்தமாக கடும் நெருக்கடிக்கு ஆளான பிரதமர் நஜிப் அடுத்த பொதுத் தேர்தலுக்கான அரசியல் நிதியை வழிமுறைப்படுத்துவதற்கான அவரின் புதிய முன்மொழிதல்களை அறிவித்தார்.

இன்று பேராக், செரி இஸ்கந்தார், யூனிவர்சிட்டி டெக்னோலஜி பெட்ரோனாஸில் பேசிய மகாதிர், ஒரு நாட்டின் வெற்றி அல்லது தோல்வி அந்நாடு அதன் கோட்பாடு அமைவுமுறைப்படி நடந்துகொள்வதைப் பொறுத்துள்ளது என்றார்.

கடனில் சிக்கியுள்ள 1எம்டிபி மற்றும் ரிம2.6 பில்லியன் “அரசியல் நிதி” ஆகியவற்றை குறிப்பிடும் வகையில், இது போன்ற பிரச்சனைகள் மீது அக்கறை கொண்டிராவிட்டால் அது நாட்டிற்கு அழிவை உண்டாக்கும் என்றாரவர்.

“இது நடக்கும், சரி, அதனாலென்ன என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால்; 40 மில்லியன் இழப்பு, அது ஓகே, எதுவானாலும் அது என் பணம் அல்ல, இதுதான் கலாச்சாரம் என்றால், நாடு அழிந்து போகும்.

“பணத்தை பெற்றுக்கொள்வது ஓகே என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் பெற்றுக்கொள்ளலாம், ஏன் கூடாது…, அதுதான் உங்களுடைய மனப்பாங்கு என்றால், அதன் விளைவாக நீங்கள் வாழும் சமுதாயம் மிக ஏழ்மையான சமுதாயமாக இருக்கும்”, என்று மகாதிர் அவரின் பேச்சை ஆழ்ந்த கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம் கூறினார்.