பெர்சே செய்திகள்

crowdமாலை  மணி  4 அளவில்  சுமார் 100,000 பேர்  டட்டாரான்  மெர்டேகாவைச்  சுழ்ந்து  கொண்டிருந்தார்கள். மெர்டேகா  சதுக்கத்தைச்  சுற்றிக்  கூட்டம்  பெருகிய  வேளையில்  கூட்டத்தில்  இருந்து  சிலர்  வெளியேறுவதையும்  காண  முடிந்தது. போலீசார்  அங்கு  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும்  அவர்கள்  தலையிடவில்லை.  கூட்டத்தைக்  கண்காணித்துக்  கொண்டு  மட்டுமே  இருந்தார்கள்.

மெர்டேகா  சதுக்கத்துக்கு  வெளியில்  பெர்சே 4.0  தலைவர்  மரியா  சின்  கூட்டத்தினரிடையே  பேசினார். பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைப்  பதவியிலிருந்து  வெளியேற்ற  வேண்டுமென்று  அவர்  கேட்டுக்கொண்டார்.

“அக்டோபர்  நாடாளுமன்றக்  கூட்டத்தில் பிரதமருக்கு  எதிராக  நம்பிக்கையில்லா  தீர்மானம்  கொண்டுவரப்பட  வேண்டும்”, என்றாரவர்.

டட்டாரான்  மெர்டேகாவில்  மலேசியாகினியிடம்  பேசிய  டிஏபி  நாடாளுமன்ற  கொறடா அந்தோனி  லொக்,  பெர்சே  பங்கேற்பாளர்கள்  இன்றிரவு  கோலாலும்பூரில்  இருக்கலாம்,  பிரச்னை  இருக்காது  என்றார்.

“கூட்டத்தைக்  கலைக்கக்  கடும்  நடவடிக்கை  எடுக்கப்படும்  என  நினைக்கவில்லை.

“எப்ஆர்யுவும்  போலீசும்  நடவடிக்கை  எடுத்தால்  அது  ஆபத்தில்  முடிந்து  விடலாம். கூட்டத்தினர்  சிதறி  ஓடி பலர்  நெரிசலில்  சிக்கி  மிதிபடும்  நிலை  உருவாகி  விடும்”, என்றார்.

பேரணி  பங்கேற்பாளர்கள்:  டட்டாரான்  மெர்டேகாவிலிருந்து  ஜாலான்  துன்  பேராக்  முழுவதையும்  அடைத்துக்  கொண்டிருந்தார்கள்.

பெர்சே  முன்னாள் இணைத்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசனும்  பேரணிக்கு  வந்திருந்தார்.  அவரைக்  கூட்டத்தினர்  சுற்றி  வளைத்துக்  கொண்டு  அவருடன்  ஆர்வத்துடன்  பேசினார்கள்.  படமெடுத்துக்  கொண்டார்கள்.

“அதிசயவைக்கும்  கூட்டம். பெர்சே  டி- சட்டைகளுக்குத்  தடை  போட்டார்கள். ஆனாலும்,  மக்கள்  அஞ்சவில்லையே”, என்று  அம்பிகா  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

இன்றைய  கூட்டம்  பெர்சே  2.0, 3.0-ஐவிட  பெரிது  என்றாரவர்.

“மிகப்  பெரிய  கூட்டம்……ஜாலான்  துன்  பேராக்  எப்படி? நூறாயிரம்  பேருக்குமேல்  இருப்பார்களா?  எனக்குத்  தெரியாது.  முழுவதையும் நான்  பார்க்கவில்லை”, என்றார்.

மலாய்க்காரர்- அல்லாதார்  பெரும்  எண்ணிக்கையில்  திரண்டு  வந்திருப்பது  பற்றிக்  கருத்துரைத்த  அம்பிகா “ரக்யாட்  மலேசியா” இதுபோன்ற  பேரணிக்குத்  திரண்டு  வருகிறார்கள்  என்பதுதான்  முக்கியம்  என்றார்.

ஜாலான்  துன்  பேராக்கில்  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  கூட்டத்தினரிடம்  பேசினார்.

“இன்று  சிலரால்  தூங்க  முடியாது. ஆனால், அது  போதாது. அவர்கள்  வாங்கிய  நன்கொடையைத்  திருப்பிக்  கொடுக்க  வேண்டும்”, என்றார்.  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  கருத்தில்  கொண்டு  அவர்  அவ்வாறு  கூறியதைக்  கேட்டுக்  கூட்டத்தினர்  கரவொலி  எழுப்பி  ஆரவாரம்  செய்தனர்.

இதனிடையே  ஒரு  அம்புலன்ஸ்  வருவதைக்  கண்டதும்  தம்  பேச்சை  நிறுத்தி  அதற்கு  வழி  விடுமாறு  கூட்டத்தினரைக்  கேட்டுக்கொண்டார். அம்புலன்ஸ்  வண்டி  தடையின்றிச்  சென்றது.

“மலேசியா  மருத்துவமனைக்குச்  செல்லும்  நிலை வரக்கூடாது. ஆனால், 1எம்டிபி-ஆல்  நிலைமை  மோசமடைந்து வருகிறது..

“ரிங்கிட்டின்  வீழ்ச்சியால் சிங்கப்பூருக்கோ  தாய்லாந்துக்கோ  போக  முடியவில்லை. அப்படியானால்  எங்கேதான்  போவது? வாங்க, டட்டாரான்  மெர்டேகா  செல்வோம்”, என்று  லிம்  சொல்லக்  கூட்டத்தில்  சிரிப்பலை  பரவியது.