1எம்டிபி விவாதம்: விதிகள் புறக்கணிக்கப்பட்டால் பண்டிகார் பதவி விலகுவார்

spekerமக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா,   1எம்டிபி  விவாதத்துக்குத்  தாம்  விதித்த  நிபந்தனைகள்  புறக்கணிக்கப்பட்டால்  பதவி  விலகப்  போவதாக  எச்சரித்துள்ளார்.

டிஏபி  எம்பி  டோனி  புவா  அருளுடன்  விவாதமிட  விரும்பினால்  பொதுக்  கணக்குக்குழு(பிஏசி)விலிருந்து  விலக  வேண்டும்  அல்லது  1எம்டிபி மீதான  விசாரணையில்  கலந்துகொள்வதைத்  தவிர்க்க  வேண்டும்  என்பது  மக்களவைத்  தலைவரின்  நிபந்தனைகளில்  ஒன்று.

அருளைப்  பொறுத்தவரை  அவர்  விவாதத்தில்  கலந்து  கொண்டால்  அதன்பின்னர் அவரை  பிஏசி  விசாரணையில்  சாட்சியாக  அழைக்க  முடியாது.

“அரசாங்கம்  விவாதத்தை  நடத்த  விரும்பினால்,  நான்  அதில்  தலையிட  மாட்டேன். மக்களவைத் தலைவர்  பதவியிலிருந்து  விலகிக்  கொள்வேன்”, என  பண்டிகார்  கூறினார்.

பிஏசி  விசாரணை  முடிவுகள்  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்யப்படுவதற்குமுன்  பொதுவில்  வெளியிடப்படுவதைத்  தடுக்கும்  மக்களவை  விதிகளின்  அடிப்படையில்  பண்டிகார்  அந்த  நிபந்தனைகளை  விதித்திருந்தார்.

“விவாதம்  நடப்பதை  அனுமதித்தால்  பின்  பிஏசி  எதற்கு,  எந்தக்  குழுவும்தான்  எதற்கு.  விவாதங்கள்  மூலமாகவே  எல்லாவற்றுக்கும்  தீர்வு  கண்டு  விடலாமே”, என்றாரவர்..