நாடற்ற சிறார்கள் அதிகமுள்ள மாநிலம் சாபா

சாபாவில்தான்  குடியுரிமையில்லாக்   குழந்தைகள்   அல்லது   இளம்  சிறார்கள்  அதிகம்   என  உள்துறை  அமைச்சு   கூறுகிறது.

சாபாவில்  21வயதுக்குக்  குறைந்தவர்களில்  23,154  பேர்   நாடற்றவர்கள்   என்று    தேசிய  பதிவுத்துறை   புள்ளிவிவரங்கள்   காட்டுகின்றன. இவ்வளவுக்கும்    இவர்களின்  பெற்றோரில்   ஒருவர்  மலேசியராக   இருப்பார்.

அக்டோபர்  13வரையிலான  கணக்கெடுப்பின்படி  நாட்டில்  21வயதுக்கு  உட்பட்டவர்களில்  43,445 பேர்  நாடற்றவர்களாக   உள்ளனர்.  இவர்களில்   பாதிப்பேர்  சாபாவில்  உள்ளனர்.

இது  மலேசிய  பெற்றோருக்குப்  பிறந்தும்   “குடியுரிமை  தகுதியற்றிருக்கும்”  குழந்தைகளின்   எண்ணிக்கையைத்   தெரிந்துகொள்ள   விரும்பிய    அலோர்  காஜா   எம்பி  கோ  நை   குவோங்குக்கு  உள்துறை  அமைச்சு   நாடாளுமன்றத்தில்   அளித்த  தகவல்.

நாடற்ற  குழந்தைகளை   அதிகம்   கொண்டுள்ள   இரண்டாவது   பெரிய  மாநிலம்  சிலாங்கூர்(3,737).    அதற்கடுத்து  ஜோகூர்(2,603), கோலாலும்பூர்(2,197),  சரவாக்(2,169).