நூருல் இசா : கர்பால் மகளின் கவலை நியாயமானது, அதனைச் செவிமடுக்க வேண்டும்

துன் டாக்டர் மகாதீர் முகமட்டைப் பிரதமர் வேட்பாளராக நியமிக்க, பக்காத்தான் ஹராப்பான் செய்த முடிவுக்கு, அதிருப்தி தெரிவித்துள்ள கர்பால் சிங் மகளின் கூற்றுக்கு செவிசாய்க்க வேண்டும் என அன்வார் இப்ராஹிமின் மூத்த மகள், நூருல் இசா தெரிவித்துள்ளார்.

பிகேஆர் துணைத் தலைவருமான நூருல் இசா, சங்கீத் கோர் டியோ தனது விமர்சனத்தை வெளிப்படையாகக் கூறியுள்ளார் என்றதோடு, ஹராப்பான் பலதரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்றார்.

“பழைய அமைப்பு முறையில் நாம் சர்வாதிகார அரசாங்கத்தில் வாழ்ந்துவிட்டோம், எனவே மக்களின் கவலைகளையும் அச்சத்தையும் அறிந்து செயல்படுவது முக்கியம்,” என்று அவர் ஃப்.எம்.தி.-இடம் கூறியுள்ளார்.

சங்கீத் கோரின் கூற்றுக்கு, டாக்டர் மகாதீரும் செவிசாய்க்க வேண்டும், ஏனென்றால் அது ‘நியாயமான கவலை’ என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, டாக்டர் மகாதீர் தனது நிர்வாகத்தின் போது பல குற்றங்களைச் செய்துள்ளார், உதாரணத்திற்கு, உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தைப் பயன்படுத்தி, அவரது தந்தை உட்பட எதிர்க்கட்சித் தலைவர்களைச் சிறையில் அடைத்தது போன்றவை. அப்படிபட்ட ஒருவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருப்பது, ஹராப்பான் கூட்டணிக்குத் தூரநோக்கு திட்டம் இல்லை என்பதனையேக் காட்டுகிறது, எனச் சங்கீத் தனது முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.

“இது மன்னிப்பு பற்றியது அல்ல, இது பொறுப்பு. அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும், அவரும் கூட அப்படிதான்,” என்று அவர் கூறினார்.

“சங்கீத் கோரின் கவலை நியாயமானது, நான் அதனை ஒப்புக்கொள்கிறேன்,” என்ற நூருல் இசா, “அதனால்தான், பிரதமர் வேட்பாளர் தேர்வுக்கான ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு, பிகேஆர் நீண்டகால விவாதத்தில் ஈடுபட்டது,” என்றார்.

“இப்பொழுது நாங்கள் ஒருமித்த கருத்துக்களை அடைந்துள்ளோம், இனி நான் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்த விரும்புகிறேன்,” என்றும் அவர் கூறியுள்ளார்.