இந்திரா காந்தி வழக்கில் இம்மாதம் தீர்ப்பு

ஓராண்டுக்கு  மேலாக   கூட்டரசு  நீதிமன்றத்தில்   உள்ள   பாலர் பள்ளி   ஆசிரியர்    இந்திரா  காந்திக்கும்    அவரின்  முன்னாள்   கணவர்   கே. பத்மநாதன்  @ முகமட்  ரிடுவான்  அப்துல்லாவுக்குமிடையிலான   வழக்கில்  ஜனவரி   29-இல்   தீர்ப்பு   வழங்கப்படும்.

அது  தொடர்பான  கடிதமொன்று   கூட்டரசு   நீதிமன்றத்திலிருந்து   தம்  கட்சிக்காரர்   இந்திரா   காந்திக்கு  வந்திருப்பதை    அவரின்  வழக்குரைஞர்   ஈப்போ  பாராட்  எம்பி   எம். குலசேகரன்  உறுதிப்படுத்தினார்.

“ஆம்,  ஜனவரி  29-இல் தீர்ப்பு   வ்ழங்கப்படும்”,  என்றவர்   மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.

நாட்டில்  பரவலான   கவனத்தை  ஈர்த்த   வழக்கு   இந்திரா  காந்தி    வழக்கு.   மதமாறிய    அவரின்   கணவர்   தாயாரின்  சம்மதமின்றியே  மூன்று  பிள்ளைகளையும்   இஸ்லாத்துக்கு   மதமாற்றி  விட்டு   2009-இல்  கடைசிக்  குழந்தை  பிரசன்னா   திக்‌ஷாவைத்   தூக்கிக்  கொண்டு   ஓடிவிட்டார்.

அவரைக்   கைது   செய்யுமாறு   நீதிமன்றம்   இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்   போலீசுக்குக்  கட்டளை   பிறப்பித்தது.  ஆனால்,  ரிடுவானும்   பிரசன்னாவும்  இருக்கும்   இடம்   யாருக்கும்   தெரியவில்லை.

2016-இல்  இரு  தரப்பு   வாதங்களையும்    கேட்ட   கூட்டரசு   நீதிமன்றம்   தீர்ப்பை   ஒத்திவைத்தது.