பெர்சே: சிலாங்கூர் தேர்தல் தொகுதி எல்லைச் சீரமைப்புக்கு ஆட்சேபம் தெரிவிக்க 100ஆயிரம் பேர் தேவை

சிலாங்கூரில்  தேர்தல் தொகுதி எல்லைகள்  சீரமைக்கப்பட்ட   முறைக்கு  எதிர்ப்புத்   தெரிவிக்க   100,000   வாக்காளர்களைத்   திரட்ட   பெர்சே  விரும்புகிறது.

தேர்தல்   ஆணையம்  இப்போது   இரண்டாவது    தடவையாக  புதிய   தேர்தல்    தொகுதிகளுக்கான    அதன்   பரிந்துரைகளை  பிப்ரவரி  14வரை    காட்சிக்கு     வைத்துள்ளது.   அதற்கு   ஆட்சேபனை   தெரிவிக்க  விரும்புவோர்  அந்தத்   தேதிக்குள்   ஆட்சேபனையைத்     தெரிவித்தாக  வேண்டும்.

இற்றைப்படுத்தப்பட்டிருக்கும்  பரிந்துரைகள்   முன்போல்    அவ்வளவு  சர்ச்சைக்குரியவையாக   இல்லை   என்றாலும்   ஒரு   சாராருக்குச்   சாதகமான  முறையில்    தொகுதிகள்   பிரிக்கப்பட்டிருப்பதையும்    தொகுதிகளின் வாக்காளர்கள் எண்ணிக்கையில்    நிலவும்   ஏற்ற தாழ்வுகளையும்   சரிசெய்ய   வேண்டியுள்ளது   என  பெர்சே   கூறியது.

100பேரைக்  கொண்ட   குழுக்களால்தான்  ஆட்சேபனைகளைத்    தெரிவிக்க   முடியும்.  ஆட்சேபனை    தெரிவிப்போரை  ஒருங்கிணைக்கும்   பணியை   பெர்சே   செய்யும்.

இதில்  கலந்துகொள்ள   விரும்புவோர்   மாநில   முழுவதும்   நிறுவப்பட்டுள்ள   ஆட்சேபனை   தெரிவிக்கும்  மையங்களில்    ஏதாவது  ஒன்றுக்குச்    சென்று  பெயரைப்  பதிந்து  கொள்ளலாம்.

பிப்ரவரி  14க்குப்   பிறகு  இசி  ஆட்சேபனை   தெரிவிப்போரின்   கருத்துகளைக்  கேட்க      பொது   விசாரணையை   நடத்தும்.

இசி  சிலாங்கூரில்   மட்டும்தான்  இன்னும்   பொது  விசாரணையை    நடத்தாதிருக்கிறது.

தேர்தல்   எல்லைகள்   திருத்தப்பட்டது   குறித்துக்   கருத்துரைத்த   விமர்சகர்கள்,  இசி   மலாய்க்கார்கள்,  சீனர்கள்  பெரும்பான்மையாக   வசிக்கும்     தொகுதிகளின்  எல்லைகளை   விரிவுபடுத்தியுள்ளதைச்   சுட்டிக்காட்டினார்கள்.    இது    ஆளும்கட்சிக்குதான்  நன்மையாக  முடியும்   என்றும்   குறிப்பிட்டனர்.