மகாதிர் ‘உதவியுடன்’ பிஎன் சிரம்பானை வெல்லும்

பிஎன்னின்   நீண்டகால  பிரதமராக   இருந்த  டாக்டர்  மகாதிர்   முகம்மட்டின்  உதவியால்   சிரம்பானில்   வெற்றிக்கனியை   எட்டிப்பிடிக்க   முடியும்  என்று   மசீச   நம்புகிறது.

மகாதிர்  எதிரணிக்குத்   தலைமையேற்றிருப்பதால்   இது   சாத்தியமே   என்கிறார்   அதன்   சிரம்பான்  வேட்பாளர்  சோங்   சின்  வூன்.

கடந்த  பொதுத்   தேர்தலில்  டிஏபி “Ubah”   என்று  முழக்கமிட்டு   அரசாங்கத்தை  மாற்றப்போவதாகக்  கூறித்   தேர்தல்  களத்தில்  குதித்தது.  அந்த  நெகிரி  செம்பிலான்   நாடாளுமன்றத்   தொகுதி   வாக்காளர்களும்  அதற்கு   ஆதரவு   கொடுத்தனர்.

“அப்போது   சீனச்  சமூகத்தின்  85  விழுக்காட்டினர்   அரசாங்க  மாற்றத்துக்காக   வாக்களித்தனர். ஆனால்,  இப்போது   அரசாங்கத்தை  மாற்ற  முடியும்    என்று   நம்புவோர்   எண்ணிக்கை   குறைந்து   விட்டது”,  என   சொங்   பிரி  மலேசியா  டுடே-இடம்   இன்று    தெரிவித்தார்.

இதற்குக்  காரணம்  மகாதிர்    பக்கத்தான்   ஹரபானுக்குத்    தலைவராக   இருப்பதுதான்   என்றாரவர்.

“எப்போதுமே  மகாதிரைக்  குறை  வந்துள்ள  டிஏபி,   இப்போது   அவர்  பிரதமராவதை   ஆதரிப்பது   ஏன்  என்பதைச்    சீனர்களுக்கு விளக்க   வேண்டும்.

“அது  எளிய  காரியமல்ல”, என்றவர்  கூறினார்.

சிரம்பானில்,  44விழுக்காடு   மலாய்க்கார  வாக்காளர்கள்,  41  விழுக்காடு  சீனர்கள்   14  விழுக்காடு    இந்தியர்கள்    என்பதால்    மசீச   மலாய்க்கார  வாக்காளர்களைக்  குறி  வைத்து  செயல்படும்  என்றார்.

டிஏபி  2008-இல்  32,970  (பெரும்பான்மை  3,948)  வாக்குகள்  பெற்று      அத்தொகுதியை  மசீசவிடமிருந்து  கைப்பற்றியது.  2013-இல்  அந்தோனி  லோக்  45,628  வாக்குகளில்,  12,553  வாக்கு  பெரும்பான்மையில்,   அங்கு   வென்றார்.

இப்போது  பிஎன்  உள்பிரச்னைகளுக்குத்   தீர்வு  கண்டு  விட்டதால்  அத்தொகுதியை      மீண்டும்  கைப்பற்ற  முடியும்   என்று  சோங்   நம்புகிறார்.