இன்னும் கட்டப்படாத இராணுவ முகாமில் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட மாட்டார்கள் என்ற உறுதிமொழி தேவை: டிஏபி

இன்னும்  கட்டிமுடிக்கப்படாதிருக்கும்   பாலோ   இராணுவ  முகாமில்   படைவீரர்கள்   வாக்காளர்களாக  பதிவு  செய்யப்பட    மாட்டார்கள்   என்ற  உறுதிமொழியைத்   தற்காப்பு   அமைச்சர்   ஹிஷாமுடின்  உசேன்     வழங்க  வேண்டும்    என   ஜோகூர்  டிஏபி  விளம்பரப்  பிரிவு   உதவிச்   செயலாளர்   ஷேக்   ஒமார்  அலி  வலியுறுத்தினார்.

“பிஎன்  இன்னும்  கட்டி  முடிக்கப்படாதிருக்கும்   பாலோ   முகாமுக்குப்  படைவீரர்களை  மாற்றிவிடாது  என்று    தற்காப்பு   அமைச்சர்   எழுத்துப்பூர்வமாக   உத்தரவாதம்   அளிப்பாரா”,  என்று   ஷேக்  ஒமார்   ஓர்    அறிக்கையில்   வினவினார்.

கட்டப்பட்டுவரும்   அந்த  முகாமுக்கு  வாக்காளர்கள்  மாற்றிவிடப்படுவதாகக்  கூறப்படுவதை   இசி   தலைவர்   முகம்மட்  ஹஷிம்   அப்துல்லா   கடந்த   புதன்கிழமை  மறுத்தார்.

இதற்குமுன்  ஜோகூர்  டிஏபி,  செகாமாட்டில்   இன்னும்   கட்டப்படாதிருக்கும்   ஒரு    இராணுவ  முகாமுக்கு   1,051    படைவீரர்கள்   மாற்றிவிடப்பட்டிருக்கும்  விவகாரத்தைக்  கவனப்படுத்தியது.

அதற்குத்   தற்காப்பு   அமைச்சு     அம்முகாம்   விரைவில்   கட்டி  முடிக்கப்படும்   என்றும்   முகாமுக்கு   அருகிலேயே  படைவீரர்கள்   வசித்து  வசித்து    வருவதாகவும்  கூறி  விட்டது.

கட்டிமுடிக்கப்படாத   முகாமில்    வாக்காளர்கள்   இருப்பதாக எப்படிப்  பதிவு  செய்யலாம்     என     டிஏபி   தெரிவித்த   ஆட்சேபனையை  இசி   ஏற்கவில்லை.