புற்று நோய் வந்ததும் ‘அவ்வளவுதான் எல்லாம் முடிந்தது’ என்று பயந்து விட்டாராம் கிட் சியாங்

டிஏபி    நாடாளுமன்றத்   தலைவர்    லிம்   கிட் சியாங்      இரும்பு   மனம்  படைத்தவர்தான்.  ஆனாலும்  சிறுநீரகத்தில்   புற்றுக்கட்டியை   அகற்ற   அறுவைச்  சிகிச்சை  செய்து  கொள்ளச்  சென்றபோது    திரும்பி   வர  முடியாமல்  போகுமோ   என்று   கலங்கிப்  போய்விட்டார்.

“அறுவைச்  சிகிச்சைக்கு     முன்பு  இத்துடன்  கதை   முடிந்தது,  வாழ்க்கை  இறுதிக்கு  வந்து  விட்டது  என்று  நினைத்தேன்”,  என்று  ஜோகூர்   பாருவில்   ஊடகங்களிடம்   கிட்  சியாங்   கூறினார்.

77வயது  நிரம்பிய    கிட்  சியாங்குக்கு   முதல்    நிலை    சிறுநீரக புற்று  நோய்   இருப்பது   கண்டறியப்பட்டு  கடந்த   ஆண்டு   டிசம்பரில்     சிகிச்சைக்குச்  சென்றார்.  அபாகரமான  நோய்க்குச்  சிகிச்சை    செய்துகொண்டிருந்த   நேரத்திலும்  அவரது   கவனம்   நாட்டின்  அரசியலின்மீதுதான்  இருந்தது.

“இதுதான்   முடிவு  என்றால்  இனி,  மலேசியா  எங்கு  செல்லும்,  என்னவாகும்     என்றெல்லாம்  நினைத்தேன்”,  என்று   குறிப்பிட்டவர்,  கட்சிக்கும்  “இறுதியாக   என்ன   சொல்ல  வேண்டுமோ”  அதைச்  சொல்லிவிட்டதாகவும்    தெரிவித்தார்.

கடைசியாக   என்ன  சொன்னார்   என்பதை   எவ்வளவு  வற்புறுத்திக்   கேட்டும்  லிம்  சொல்லவில்லை.  “என்  சுய  சரிதத்தில்தான்  அதைச்  சொல்வேன்”,  என்று   கூறி  விட்டார்.