கஸானாவை அடுத்து, ஆக்சியாதா தலைவர் பதவியிலிருந்தும் விலகினார் அஸ்மான் மொக்தார்

ஆக்சியாதா குரூப் பெர்ஹாட் நிறுவனத்தில், கடந்த 10 ஆண்டுகளாக தான் வகித்துவந்த தலைவர் பதவியிலிருந்து அஸ்மான் மொக்தார் இன்று விலகினார்.

கஸானா நேசனல் பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்தும் அண்மையில் அவர் விலகியது குறிப்பிடத்தக்கது.

அஸ்மான் தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர் எனவும், கடந்த 10 ஆண்டுகளாக சிறந்த சேவையை வழங்கி, ஆசியாவில் மிகப் பெரிய தொலைத்தொடர்புக் குழுக்களில் ஒன்றாக அந்நிறுவனத்தின் நிலைப்பாட்டை வெற்றிகரமாக பலப்படுத்தியதாகவும் ஆக்சியாதா இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

கடந்த டிசம்பர் 2017 வரை, ஆக்சியாதாவின் மொத்த சந்தாதாரர்களை 40 மில்லியனிலிருந்து ஏறக்குறைய 350 மில்லியனாக உயர்த்தியுள்ளதாகவும், ஆசியான் மற்றும் தெற்காசியாவில் இரண்டாவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு குழுவாக உருவாக்கியுள்ளதாகவும் அது தெரிவித்தது.

அதுமட்டுமின்றி, ஆக்சியாதாவின் வருவாய் இரு மடங்கு உயர்ந்து, ரிம 24 பில்லியனாகியுள்ளது.

-பெர்னாமா