‘அம்னோ இன உணர்வுகளைத் தூண்டிவிடுவதை நிறுத்தாவிட்டால் அழிந்து போகும்’

அம்னோ தலைவர்கள், இழந்துவிட்ட நம்பிக்கையைத் திரும்பப் பெற விரும்பினால் இன உணர்வுகளைத் தூண்டிவிடுவதை நிறுத்திக்கொண்டு நடப்பு விவகாரங்களைக் கையிலெடுத்து தெளிவாக விவாதிக்க வேண்டும் என பெர்சத்துவான் பெட்ரியோட் கெபாங்சாஆன்(பெட்ரியோட்) கூறியது.

கடந்த சனிக்கிழமை பாசிர் சாலாக் அம்னோ தலைவர்கள் ஏற்பாடு செய்த இன உணர்வுமிக்க ஹிம்புனான் மலாயு பாங்கிட் பேரணி நாட்டின் ஒற்றுமைக்கு உகந்ததல்ல என்று பெட்ரியோட் தலைவர் முகம்மட் அர்ஷாட் ராஜி கூறினார்.

“அம்னோ தலைவர்கள் முதிர்ச்சி அடைந்தவர்களாக நடந்து கொண்டு தேசிய மற்றும் சமூக விவகாரங்களைக் கையிலெடுக்க வேண்டும். இழந்த நம்பிக்கையைப் பெற அதுவே சிறந்த வழி.

“மலேசிய மக்களைச் சினமுறச் செய்யும் விவகாரங்களைக் கிண்டிக் கிளறிவிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

“தவறினால் இனத்தையும் சமயத்தையும் மையமாகக் கொண்டு செயல்படும் கட்சி விரைந்து அழிந்து போகும்”, என்றவர் இன்று அறிக்கை ஒன்றில் கூறினார்.

“கடந்த 60 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட அம்னோ மலாய்க்காரர்களுக்கும் மலாய் ஆட்சியாளர்களுக்கும் பாதுகாப்பு தேவை என்று இன்னமும் கூறிக்கொண்டிருந்தால் முந்தைய அம்னோ அரசாங்கத்தின் கொள்கைகளில்தான் கோளாறு என்று பொருளாகும்”, என்றாரவர்.

அம்னோ பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்துக்கு எதிரான பகைமைப் போக்கைக் கைவிட்டு ஒரு நல்ல எதிரக்கட்சியாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் அர்ஷாட் வலியுறுத்தினார்