மஇகாவின் குமார் அம்மான் போர்ட்டிக்சனில் போட்டியிடப் போகிறார்

எதிர்வரும் போர்டிக்சன் இடைத் தேர்தலில் அம்னோ தோற்கடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜி. குமார் அம்மான் அங்கு போட்டியிடப் போகிறார்.

14 ஆவது பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்த பின்னரும் தன்னைத் திருத்திக்கொள்ளத் தவறி விட்ட அம்னோவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்த இடைத் தேர்தலில் அம்னோ பெரும் தோல்வியடைவதை உறுதி செய்வது தமது முக்கிய நோக்கம் என்று குமார் அம்மான் மேலும் கூறினார்.

நான் பிஎன்னின் கையாள் என்று நினைக்கிறார்கள். உண்மையில் நான் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெறுவதை விரும்புகிறேன். எது முக்கியமானது என்றால், அம்னோ தோற்கடிக்கப்பட வேண்டும் என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

பக்கத்தான் நிருவாகத்தின் மீதும் அதிருப்தி கொண்டுள்ள வாக்காளர்களும் போர்ட்டிக்சனில் இருக்கிறார்கள் என்றும் கூறிக்கொண்டார்.

அவர்கள் ஹரப்பான், பிஎன் போன்றதுதான் என்று நினைக்கிறார்கள். இனிப்பான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றுகிறார்கள். இதனால் பலர் பிஎன்னை விரும்பாத போதிலும் அம்னோவுக்கு வாக்களிப்பார்கள் என்றாரவர்.

எனது கவனமெல்லாம் இந்த 12,000க்கு மேற்பட்ட இந்திய வாக்காளர்கள் மீதுதான் என்று அவர் மேலும் கூறினார்.