நாற்காலி வீசப்பட்ட சம்பவத்துடன் எங்களை இணைத்துப் பேசுவதா? அன்வார் மன்னிப்பு கேட்க வேண்டும்: குமுறுகிறது மஇகா

மஇகா ‘நாற்காலிகளை வீசி எறியும்’ கட்சி என்னும் பொருள்பட பேசியுள்ள அன்வார் இப்ராகிம் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த பிஎன் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

பிகேஆர் தலைவரின் பேச்சு ம இகாவை மட்டுமல்லாமல் இந்திய சமூகத்தையே இழிவுபடுத்துகிறது என்று மஇகா உதவித் தலைவர் டி.மோகன் கூறினார்.

“அன்வாருக்குக் கற்பனை வறண்டு விட்டது. அதனால்தான் அவருடைய கட்சிப் பலவீனம் பற்றிப் பேச வந்த அவர் இந்திய சமூகத்தை இழுக்க வேண்டியதாயிற்று”, என்றவர் மலேசியாகினியிடம் கூறினார்.

“அன்வாரின் கூற்று இந்தியர்கள்தான் நாற்காலிகளை வீசி எறிபவர்கள் என்ற தோற்றப்பாட்டை உருவாக்க முயல்கிறது. ஆனால், நாற்காலி வீசி எறிதல், வாக்குச்சீட்டுகளைப் பறித்தல் போன்ற குண்டர்தனச் செயல்களுக்குப் பேர்போன கட்சி பிகேஆர்தான் என்பதை மலேசியர்கள் அனைவரும் அறிவர் என்று மோகன் மேலும் குறிப்பிட்டார்.

நேற்று அன்வார் இப்ராகிம், பினாங்கிலும் கெடாவிலும் பிகேஆர் கட்சித் தேர்தல்களின்போது நாற்காலிகளை வீசி எறிந்து கலாட்டா செய்த கட்சி உறுப்பினர்களைக் கட்சியிலிருந்து நீக்கப் போவதாகக் கூறினார்.

அப்போது அவர் “ இதை மஇகா என்று நினைத்து விட்டார்கள். முன்பு மஇகாவில் நாற்காலிகள் வீசி எறியப்படும் சம்பவங்கள் நடக்கும். இப்போது அங்கு அது இல்லை என்பதால் இங்குள்ளவர்கள் ’நாற்காலிகள் வீசி எறியத் தொடங்கி விட்டார்கள்’”, என்று கூறினாராம்.