இசி: அன்வாருக்கு பிடி-இல் போட்டியிடும் தகுதி உண்டு

போர்ட் டிக்சன் இடைத் தேர்தலில் போட்டியிடும் தகுதி அன்வார் இப்ராகிமுக்கு உண்டு என்பதைத் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தி இருப்பதாக அந்த ஆணையத்தின் புதிய தலைவர் அஸ்ஹார் அசிசான் கூறினார்.

ஆனால், பிகேஆர் தலைவர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது செல்லாது என்று யாராவது வழக்கு தொடுத்தால் அது குறித்து நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றாரவர்.

“பேரரசர் கொடுத்த மன்னிப்பை அடிப்படையாகக் கொண்டு அன்வாரின் வேட்பு மனுவை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.

“நீதிமன்ற வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதையும் அறிவோம்……அது குறித்து நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.

“நீதிபதி அப்படி முடிவு செய்தால் அல்லது இப்படி முடிவு செய்தால் நாங்கள் என்ன செய்வோம் என்பதை முன்கூட்டியே தெரிவிக்க இயலாது.

“இப்போதுள்ள நிலவரப்படி, அன்வார் ஒரு வேட்பாளர், இடைத் தேர்தலில் அவர் போட்டியிடுகிறார்”, என அஸ்ஹார் இன்று போர்ட் டிக்சனில் கூறினார்.