ம.இ.கா உறுப்பினர்கள் ஏமாளிகள் அல்ல, முகமது ஈசாவுக்கு வாக்களிக்க! சேவியர்

 

அம்னோ ம.இ.காவுக்கு தொடர்ந்து இழைத்துவரும் அநீதியை, இந்தியர்கள் நல்வாழ்வுக்கு ஏற்படுத்தியுள்ள  இடர்பாடுகளை போர்டிக்சன் ம.இ.கா உறுப்பினர்கள் மறந்து அம்னோவின் முன்னாள் முக்கியத் தலைவரும் போர்டிக்சன் இடைத்தேர்தல் சுயேச்சை வேட்பாளருமான  முகமது ஈசாவுக்கு வாக்களித்து அவர்களின் பொன்னான வாக்குகளை வீணடிக்கக் கூடாது  என்கிறார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

முன்னாள் பாரிசான் அரசாங்கம் இந்தியர்களின் நல்வாழ்வுக்குச் சேவையாற்ற மறுத்த ஒரு நிருவாகம் மட்டுமின்றி, நம் மக்களின் வாழ்வுக்கும், மத நம்பிக்கைகளுக்கும் கேடு விளைவித்ததுடன், உழைத்து ஓடாய்ப் போன இந்த ஏழை இனம் தனது இறுதி பயணத்தைக்கூடக் கௌரவமாக மேற்கொள்ள முடியாதவாறு இடையூறு செய்த கட்சி ”அம்னோ” என்பதை மறக்கக் கூடாது என்றாரவர்.

உங்கள் போர்டிக்சன் தொகுதிக்கு  அருகிலிருக்கும் சிலாங்கூர் மக்கள் 25க்கு மேற்பட்ட மக்கள் நலன் திட்டங்களின் வாயிலாக இன்று பயனடைந்து வருகின்றனர். அம்மாநிலப் பக்காத்தான் அரசு, மக்கள் நலன் திட்டங்களில் பங்கேற்க எவ்வித மத, இனப்பாகுபாடுகளையும் காட்டுவதில்லை. ஆனால், அம்மாநிலம் பாரிசான் ஆட்சியில் இருந்த பொழுது  வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களுக்குக் கூட நிலம் வழங்கி வாழவைத்த பாரிசான்  அரசாங்கத்துக்குத் தோட்டங்களில்  உழைத்து ஓடாய்ப் போன தமிழர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை.

தோட்டத்தை விட்டு வெளியேறி இருக்க இடமில்லாமல் தவித்தவர்கள், பல பட்டணப் புறம்போக்கு நிலங்களில் ஒதுங்கியவர்கள், அவர்களின் கையிலிருந்த கடைசி சேமிப்பான சேமநிதி சந்தாவின் வழி நிறுவிய குடிசைகளையும், பாரிசானின் பூஜ்ஜியம் குடிசை என்ற கோட்பாட்டின் கீழ் உடைத்தெறிந்தது.  அங்கிருந்த மக்களையும், ஆலயங்களையும் அகற்றியது.

மாநில அரசாங்கத்தில் எல்லா மக்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்த மரணச் சகாய நிதிகூட இந்த ஏழைச் சமுதாயத்திற்குக் கிட்டாமல் செய்த பாவிகளின் கட்சி அம்னோ என்பதை நாம் மறக்கக் கூடாது. அவர்கள் இன்னும் மாறவே இல்லை  என்பதை ம.இ.காவுக்குப் போர்டிக்சன் இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு  மறுக்கப்பட்டது எடுத்துக் காட்டுகிறது.

பாரிசான் கட்சிகளின்  பாரம்பரியத் தொகுதிகளான சிலாங்கூர்  சுங்கை காண்டிசில் அம்னோவும்,  பாலக்கோங் சட்டமன்றத் தொகுதியில் ம.சீ.சாவும் போட்டியிட்ட வேளையில் ம.இ.காவுக்கு மட்டும் ஏன் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது? பாரிசானின்  எந்தக் கட்சியும்  போர்டிக்சனில் போட்டியிடாது என்று தன்னிச்சையாக அம்னோ ஏன் அறிவித்தது? ம.இ.கா வெற்றி பெற்றுவிடும் என்ற அச்சமா என்று சேவியர் வினவினார்.

ஆனால், இன்று அம்னோவின் முக்கியத் தேசியத் தலைவர்களில் ஒருவரும் முக்கிய உள்ளூர் அம்னோ தலைவருமான முகமது ஈசா அம்னோ உறுப்பினர்கள் தன்னை ஆதரிப்பார்கள் என்றே  அறிக்கை விட்டுள்ளார். அவர் வெற்றி பெற்றாலும், அதற்கான  முழு மதிப்பையும், மரியாதையும் பலனையும் அம்னோவே அனுபவிக்கப்போகிறது,

ம.இ.காவும் இந்தியர்களும் மீண்டும் ஏமாற்றப்பட்டு விட்டார்கள்! இன்னுமா ம.இ.கா முகமட் ஈசாவுக்கு வாக்களிக்க வேண்டும்? அப்படிப்பட்ட வெட்கங்கெட்டவர்கள் ம.இ.கா உறுப்பினர்கள் இல்லை என்பதை  அதன்  உறுப்பினர்கள் அம்னோவிற்கு உரக்க உணர்த்துவார்கள் என்று நம்புகிறேன் என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.