கிள்ளானில் அரவாணி ஒருவர் அடிக்கப்பட்டு மரணம்

புக்கிட் திங்கியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன்புறம், ஆயுதங்களைப் பயன்படுத்தி ஆண்கள் குழு ஒன்றினால் தாக்கப்பட்ட அரவாணி ஒருவர், கிள்ளான் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மரணமுற்றார்.

சபாவைச் சேர்ந்த 32 வயதான அவர், இன்று காலை 10.47 மணியளவில், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் இறந்துபோனார்.

நேற்று காலை, 7 மணியளவில், கடுமையான காயங்களுக்கு ஆளான அவரை ஹோட்டல் பாதுகாவலர் கண்டதாக தென் கிள்ளான் மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி சம்சுல் அமர் ரம்லி தெரிவித்தார்.

“உடல் முழுதும் காயங்களுடன், இடது கை முறிந்து, தலை பகுதிகள் வீங்கிய நிலையில் இருந்த அவரை, ஆண்கள் குழு ஒன்று தாக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது,” என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

குற்றவியல் சட்டம் 302-ஆம் பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரணை செய்யப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.

-பெர்னாமா