‘காவல் நிலையத்தைத் தாக்குவேன்’ என்று மிரட்டிய அஸ்வான்டின்மீது போலீஸ் விசாரணை

நேற்றைய பேரணியில் சினமூட்டும் வகையில் பேசிய அஸ்வான்டின் ஹம்சாமீது போலீஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கிறிமினல் மிரட்டல் விவகாரங்கள் தொடர்பான குற்றவியல் சட்டம் 506-ஆவது பிரிவின்கீழ் விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாக சிலாங்கூர் சிஐடி தலைவர் பாட்சில் அஹமட் கூறினார்.

அவரை வினவியதற்கு, “பிரிவு 506-இன்கீழ் விசாரணை நடக்கிறது”, என்று குறுஞ் செய்திவழி பதில் அளித்திருந்தார்.

நேற்று கிள்ளானில் கெராக்கான் ரக்யாட் மலேசியா ஏற்பாடு செய்திருந்த பேரணியில் உரை நிகழ்த்திய அஸ்வான்டின், பிரதமர்துறை அமைச்சர் பி.வேதமூர்த்தியை ப-வில் தொடங்கும் தமிழ்க் கெட்ட வார்த்தையால் திட்டினாராம்.

அதன் பின்னர் சிலாங்கூர் யுஎஸ்ஜே 25-இல் உள்ள சீபீல்ட் ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்தில் கலகம் செய்தவர்களைக் கைது செய்யாவிட்டால் கிள்ளான் காவல் நிலையத்தைத் தாக்கப் போவதாக மிரட்டினாராம்.

நேற்று கிள்ளானில் நடந்த அப்பேரணி, காலஞ்சென்ற தீயணைப்பு வீரர் முகம்மட் அடிப் முகம்மட் காசிமுக்கு நீதி கேட்டுப் போராடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியாகும்..