தைப்பூசத்தில் வானவேடிக்கை விபத்து : மேலும் ஒருவர் கைது

நேற்றிரவு தைப்பூசக் கொண்டாட்டத்தின் போது, பத்துமலை, ஶ்ரீ சுப்ரமணியர் ஆலயம் அருகே வெடித்த வானவேடிக்கை விபத்து தொடர்பில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை மணி 3 அளவில், பத்துமலை வட்டாரத்தில், 25 வயது நிரம்பிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக, கோம்பாக் போலிஸ் தலைவர் ஏசிபி சம்சோர் மாரோஃப் தெரிவித்தார்.

“இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை 4 நாட்களுக்கு தடுத்து வைக்கப்படுவர்.

“அவர்களில் ஒருவர் மீது ஏற்கனவே ஒரு குற்றப்பதிவு உள்ளது. போலிஸ் அவர்கள் அனைவருக்கும் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளும்,” என அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார்.

அவ்வான வேடிக்கை விபத்தில் காயமடைந்த 34 பேரும், சிகிச்சைக்குப் பின்னர் இன்று வீடு திரும்பினர்.