பாதிரியார் ரேய்மண்ட் கோ-வின் மனைவி எதிர்பார்க்கும் ஈஸ்டர் அதிசயம் நிகழுமா?

தன் கணவர் ரேய்மண்ட் கோ காணாமல்போனதன்மீதான மனித உரிமை ஆணையத்தின் அறிக்கையை இன்று மலேசிய கிறிஸ்துவ சம்மேளன(சிஎப்எ)ம்த்திடம் ஒப்படைத்த சுசான்னா லியு, இறை அருளால் ரேய்மண்ட் விடுவிக்கப்படும் அதிசயம் நிகழலாம் என்று எதிர்பார்க்கிறார்.

தன் குடும்பத்தின் தொல்லைகளும் துயரங்களும் முடிவுக்கு வரப்போகின்றன என்ற நம்பிக்கையில்தான் சிஎப்எம்-மைச் சந்திக்க இப் புனித சனிக்கிழமையைத் தேர்ந்தெடுத்ததாக அவர் சொன்னார்.

“இது ஒரு மங்கலகரமான நேரம், ஈஸ்டரைக் கொண்டாடுகிறோம். நேற்று புனித வெள்ளிக்கிழமை. எங்களுக்கு நம்பிக்கை உள்ளது, ஏசு கிறிஸ்து மறித்து ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்று நம்புகிறோம் அல்லவா, அதைப் போன்றதுதான் இது.

“இதுவரை மூடியிருந்த இருள் அகலும் என்று நம்புகிறோம்”. சுசான்னா இன்று காலை பெட்டாலிங் ஜெயாவில் மலேசிய தேவாலயங்களின் மன்றத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசினார்.

“நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கிறோம். காணாமல்போனவர்கள், குறிப்பாக ரேய்மண்ட் விடுவிக்கப்படுவதை எதிர்பார்க்கிறோம்”, என்றாரவர்.