‘ஊடக நிறுவனம் கட்சியில் பிரிவினை ஏற்படுத்த முயல்கிறது’- பாஸ் தலைவர் குற்றச்சாட்டு

பாஸ் தலைவர் ஒருவர், இம்மாத இறுதியில் கட்சியின் ஆண்டுக் கூட்டம், முக்தாமார், நடைபெறவுள்ள வேளையில் ஒரு ஊடக நிறுவனம் கட்சியில் பிளவு உண்டுபண்ண முயல்கிறது எனக் குற்றஞ்சாட்டினார்.

பாஸ் உதவித் தலைவர் இஸ்கண்டர் சமட் அந்நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை, ஆனால் அதில் வெளிவரும் செய்திகள் பாஸுக்குள் பல பிரிவுகள் செயல்படுவதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றன என்றார்.

மற்ற கட்சிகளைப் போலல்லாமல் பாஸில் பதிவிப் போராட்டம் இல்லை என்றாரவர்.

“பாஸ் தேர்தல்கள் இணக்கமான சூழலில் நடத்தப்படுகின்றன. தோற்றால் ஆத்திரமுற்று மற்றவர்களைக் குறை சொல்வோர் இங்கு இல்லை.

“தலைவர்களும் தொண்டர்களும் ஒன்றிணைந்து குழுவாக தொடர்ந்து செயல்படுவார்கள்”, என்றவர் இன்று காலை அறிக்கை ஒன்றில் கூறினார்.

பாஸில் பிளவை உண்டுபண்ணும் முயற்சிகளின் நோக்கம் எதிரணி கூட்டணியைப் பலவீனப்படுத்துவதும் பாஸ்- அம்னோ ஒத்துழைப்பை உடைத்தெறிவதும்தான் என்று இஸ்கண்டர் கூறினார்.