டிஏபி தலைவர்கள் அனுபவசாலிகள், சாதிக்போல் ‘சிறுபிள்ளை’கள் அல்ல- இராமசாமி

பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமி, சிலாங்கூர் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள பெர்சத்து இளைஞர் தலைவர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மானைக் கடுமையாக சாடினார்.

டாக்டர் மகாதிர் முகம்மட்டைக் குறைகூறிய லியுமீது பிபிபிஎம் தலைவர்களுக்கு ஆத்திரம் இருக்கலாம் அதற்காக எச்சரிக்கை விடுப்பது, மிரட்டுவது எல்லாம் முறையல்ல என்று இராமசாமி கூறினார்.

“டிஏபி தலைவர்களும் அதேபோன்ற முதிர்ச்சியற்ற அணுகுமுறையைக் கடைப்பிடித்தால் என்னவாகும், வெளிப்படையான போர்தான்.

“நல்ல வேளையாக, டிஏபி தலைவர்கள், சிறு பிள்ளை சாதிக்போல் அல்லாமல் தெளிவானவர்கள், பொதுவில் பேசும்போது கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பவர்கள்”, என்றவர் முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.

லியு பேசியது சரியா தப்பா என்று கருத்துரைக்க இராமசாமி விரும்பவில்லை. ஆனால், டிஏபி ஒழுங்கு நடவடிக்கைக் குழு சரியான முடிவெடுக்கும் என்றவர் நம்புகிறார்.