சீனப்புத்தாண்டு வாழ்த்து செய்தி – லிம் குவான் எங்

அமைச்சர் குரல் | ஜனநாயக அடிப்படையில் நடுநிலைத்தன்மை, சட்ட ஆட்சி, செயல்திறன் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவையே முன்னேற்றத்திற்கான வழி. இதுவே இனம், மதம், இடம், மக்கள்தொகை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் மக்களை மதித்து பாதுகாக்கின்ற ஒரு மலேசியாவை உருவாக்க உதவிகிறது.

மலேசியர்கள் எல்லோரும் ஒரு தேசிய தன்மையோடு பிரச்சினைகளைப் பார்க்க தயாராக இருக்க வேண்டும், நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம், ஜனநாயக விதிமுறைகள் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் ஆகியவற்றின் படி முன்னோக்கு சிந்தனையுடன் இருக்க வேண்டும்.

மலாய்காரர் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களை குறிவைத்து, ஊழல் மற்றும் பொருளாதார முறைகேடு மூலம் தாங்கள் முன்பு இழந்த அதிகாரத்தை மீண்டும் பெற முயற்சிப்பவர்களை பக்காத்தான் ஹராப்பனின் நடுநிலைமான கொள்கை வன்மையாக கண்டிக்கிறது.

சீன சமூகம் சில சீன ஆளுமைகள் மற்றும் நிறுவனங்களிலிருந்து தங்களைத் விலக்கிக் கொள்ள வேண்டும். அவை சுயநலத்திற்காக, கீழ்கண்ட ஆபத்தான, மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலை ஆதரிக்க தயாராக உள்ளன:

  • பிறமொழிப் பள்ளிகளுக்கான நிதியுதவியை எதிர்க்கின்றனர், சிலர் அதை மூடுமாறு அழைப்பு விடுக்கின்றனர்;

  • முஸ்லிம் அல்லாத பொருட்கள் மற்றும் வணிகங்களை புறக்கணித்தல்;

  • முஸ்லிமல்லாதவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவதை தடுத்தல்;

  • இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை அகற்றுதல்;

  • முஸ்லிமல்லாதவர்களின் மத கொண்டாட்டங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு வெளிப்படையான அவமதிப்பைக் காட்டுதல்; மற்றும்

  • முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக கொடூரமான பொய்களைப் பரப்புதல், மற்றும் அப்பொய்களை நியாயப்படுத்துதல்.

இந்த இனவாதிகள், மத தீவிரவாதிகள் மற்றும் பேரினவாதிகள் அந்தந்த சமூகங்களில் ஆதரவு பெற்று உயர்ந்தால், அது மலாய், மலாய் அல்லாதவர்கள், முஸ்லீம், முஸ்லிம் அல்லாதவர்கள் என அனைவருக்கும் பாதிப்பை உண்டாகும்.

இதனால் முந்தைய அரசாங்கத்தின் RM150 பில்லியன் நிதி மோசடி மட்டுமல்ல, இப்போதும் கூட சில மாநில அரசாங்கங்கள் திவாலான நிலையில், திறமையற்ற முறையில் ஆளுமை செய்யப்படுகின்றன.

மாநில அரசு, தன் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை செலுத்த முடியாத நிலையில், மத்திய அரசிடமிருந்து கடன் வாங்க வேண்டியிருந்தாலும் கூட, விலையுயர்ந்த சொகுசு வாகனங்கள் (மெர்சிடிஸ் பென்ஸ்) மற்றும் RM50,000 சிறப்பு ‘போனஸ்’ போன்ற ஆடம்பர வெகுமதிகளை அளிக்கக்கூடிய மாநில அரசாங்கத் தலைவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக யுத்தம் தணிந்து வருவதால், 2020ஆம் ஆண்டில் மலேசிய பொருளாதாரம் 2019ஐ விட சிறப்பாக இருக்கும். RON95 லிட்டருக்கு RM2.20லிருந்து RM 2.08 ஆகக் குறைத்தல், பிப்ரவரி 1 முதல் பிளஸ் நெடுஞ்சாலைகளுக்கான தனியார் வாகனங்களின் கட்டண விகிதத்தில் 18 சதவிகிதம் குறைத்தல், என பாக்காத்தான் ஹராப்பான் அதன் பொதுத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது.

நாட்டை முன்னேற்றுவதில் ஹராப்பானின் அனைத்து உறுப்பிய கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன. பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் முதல் அன்வர் இப்ராஹிம் வரையிலான அடுத்தடுத்த திட்டம், தொடர்ந்து அரசியல் நல்லாட்சியை வழங்கும் என்பது உறுதி.

எங்கள் பலவீனங்கள் எதுவாக இருந்தாலும், முந்தைய அரசாங்கத்தை விட ஹராப்பான் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. பொருளாதாரத்தில் கவனம் செலுத்தி, மலேசியர்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கக்கூடிய ஹராப்பானின் பொதுத் தேர்தல் வாக்குறுதிகளை வெற்றியாக்க அனைவரும் ஒன்றுபடுவோம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்! கோங் ஜி ஃபாட் சாய்!