கொரோனா வைரஸ் தாக்குதல் – சீனா, வுஹானுக்கு விமானங்களை நிறுத்தியது ஏர் ஏசியா, மலிண்டோ

வுஹான் (Wuhan) நகரில் கொரோனா வைரஸ் (Corona virus) பரவியததைத் தொடர்ந்து பட்ஜெட் விமான நிறுவனங்களான ஏர் ஏசியா மற்றும் மலிண்டோ ஏர் ஆகியவை சீனாவின் வுஹானுக்கு விமானங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

கோத்தா கினாபாலு, பாங்காக் மற்றும் ஃபூகெட் ஆகிய இடங்களிலிருந்து வுஹானுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஏர் ஏசியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“ஏர் ஏசியா, உலக சுகாதார அமைப்பு மற்றும் உள்ளூர் சுகாதார அமைப்புகளின் ஆலோசனைகளையும் விதிமுறைகளையும் பின்பற்றுகிறது” என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கோலாலம்பூர் விமான நிலையம் மற்றும் வுஹான் தியான்ஹே சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் விமானங்களை நிறுத்தியுள்ளதாக மலிண்டோ தெரிவித்துள்ளது.

வுஹானில் இருந்து தோன்றியதாக நம்பப்படும் கொரோனா வைரஸ், 570 பேரை தாக்கி, இதுவரை 17 உயிர்களைக் பரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தைவான், ஜப்பான், தாய்லாந்து, தென் கொரியா மற்றும் அமெரிக்காவை அடைந்துள்ளது.

மலேசியா உட்பட பல நாடுகள் வைரஸ் பரவாமல் தடுக்க விமான நிலையங்களில் கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளன.

பெய்ஜிங், 11 மில்லியன் மக்கள் வசிக்கும் வுஹானை கடும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. விமானங்கள், ரயில்கள், பேருந்துகள் மற்றும் படகுகள், நகரத்திற்குள் அல்லது வெளியே அனுமதிக்கப்படுவதில்லை.

2002 ஆம் ஆண்டில் குவாங்டாங்கில் (Guangdong) தொடங்கி உலகெங்கிலும் வேகமாக பரவிய கடுமையான சுவாச நோயான சார்ஸ் (Sars) நவம்பர் 2002 மற்றும் ஜூலை 2003க்கும் இடையில் 8,273 சம்பவங்கள் பதிவாகி, 775 பேரை பறித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வைரஸ் குறித்து மேலும் விவரங்களைத் தருகிறது www.bbc.com/tamil:

மனிதர்கள் இதுவரை கண்டிராத வைரஸ் ஒன்று சீனாவில் வேகமாக பரவி வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சீன அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் – சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது.

11 மில்லியன் (1.1 கோடி) மக்களைக் கொண்ட மத்திய சீன நகரமான வுகானில் இந்த நோய் முதலில் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது.

வுஹானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து பரவி இருப்பதாக சீன அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அதனால் விலங்குகளிடம் பாதுகாப்பற்ற வகையில் நேரடி தொடர்பை வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு சமைத்த பிறகே சாப்பிட வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இபோலா, பன்றிக் காய்ச்சல் ஆகியவை பரவியபோது அறிவிக்கப்பட்டதுபோல, இந்த வைரஸ் பரவலையும் சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவிக்க வேண்டுமா என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் இன்று முடிவு செய்யவுள்ளது.

சர்வதேச சுகாதார நெருக்கடியாக இது அறிவிக்கப்பட்டால், இதன் பரவலைத் தடுக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வைரஸ் குறித்து இதுவரை என்ன தெரியும்?

இந்த வைரஸ் முதலில் மனிதர்களின் நுரையீரலை தாக்கக்கூடும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். கொரோனா வைரஸ் என்பவை பரவலான தொகுப்பைச் சேர்ந்தவை. இந்த வைரஸ் குடும்பத்தில் ஆறு வகைகள் மட்டுமே மக்களை பாதிக்கக் கூடியவையாக இருந்தன. தற்போது பரவி வரும் வைரஸை சேர்த்தால் இந்த எண்ணிக்கை ஏழாகிறது. இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் என்று சீனாவின் தேசிய மருத்துவ கமிஷன் அறிவித்துள்ளது.

சுவாச பிரச்சனை, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகள். இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா மற்றும் உயிரிழப்பை ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.

இதற்கு என்ன சிகிச்சை?

இந்த வைரஸ் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதால், இதனை தடுப்பதற்கு தற்போதைக்கு ஊசியோ சிகிச்சையோ ஏதுமில்லை.

இந்த வைரஸ் இருக்கும் நபர்களிடம் இருந்து தள்ளி இருப்பதன் மூலம் இது பரவாமல் தடுக்க முடியும்.

மேலும், இருமல் அல்லது காய்ச்சல் அறிகுறி இருக்கும் நபர்களின் நேரடி தொடர்பை தவிர்க்க வேண்டும் என்றும் மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.