ஆறு மாநிலங்கள் நாளை பொருளாதாரத்தைத் திறக்காது என முடிவெடுத்துள்ளன

ஆறு மாநிலங்கள் நாளை பொருளாதாரத் துறையை மீண்டும் திறக்காமல் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளை தொடரும்.

அவை சரவாக், சபா, பினாங்கு, பகாங், கிளந்தான் மற்றும் கெடா ஆகிய மாநிலங்கள் ஆகும்.

பினாங்கு மாநிலம் மே 8 ஆம் தேதி வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும். ஆனால் மே 12 வரை பொழுதுபோக்கு நடவடிக்கைகளை தடுப்பது போன்ற பிற கட்டுப்பாடுகளை பராமரிக்கும்.

பகாங், கிளந்தான் மற்றும் கெடா ஆகியவை அடுத்த வாரம் பொருளாதாரத்தை மீண்டும் திறக்கலாமா என்பது குறித்து விவாதிக்கும்.

தேசிய பாதுகாப்பு கவுன்சில் நாளை கூடும் போது ஜோகூர் அரசு ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை, திரங்கானு மாநிலம் மட்டுமே திங்கள்கிழமை முதல் பொருளாதாரத்தை திறக்க அனுமதிக்கும் என்று அறிவித்த ஒரே மாநிலம் ஆகும்.

பெர்லிஸ் மற்றும் மலாக்காவின் நிலை இன்னும் அறியப்படவில்லை.

சிலாங்கூர், பேராக் மற்றும் நெகிரி செம்பிலன் ஆகியவை நாளை வணிகங்களைத் திறக்க அனுமதிக்கின்றன. ஆனால் இந்த மூன்று மாநிலங்களும் வாடிக்கையாளர்களை உணவகங்களில் சாப்பிட அனுமதிக்காது.

நெகேரி செம்பிலன் மற்றும் பேராக் ஆகிய மாநிலங்கள் பொது பூங்காக்களில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை அனுமதிக்காது.

சிலாங்கூரில், திறந்தவெளி மற்றும் சமூக பூங்காக்களில் பொதுமக்கள் உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் பொது பூங்காக்களில் நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுவதில்லை.

மே 1 ம் தேதி, பிரதமர் முகிதீன் யாசின், பெரிய கூட்டங்கள் சம்பந்தப்படாத பொருளாதார நடவடிக்கைகள் நாளை மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும் என்று அறிவித்தார்.

அவர் புதிய விதியான “நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை” அறிவித்து, இது மே 12 வரை அமல்படுத்தப்படும் என்றும், அடுத்தடுத்த மாற்றங்களுக்கு உட்பட்டது என்றும் கூறினார்.

இருப்பினும், தேவைப்பட்டால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மாநில அரசுகள் அனுமதிக்கப்படுகின்றன.

பேராக், பினாங்கு, கெடா மற்றும் கிளந்தான் போன்ற சில மாநிலங்கள் இரண்டு வாரங்களுக்கும் மேலாக புதிய கோவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்யவில்லை.