கோவிட் – 19: 732 புதிய பாதிப்புகள், 6 இறப்புகள், 102 பேர் அவசரப் பிரிவில்

இன்று மதியம் வரை, நாட்டில் 732 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

535 புதியத் தொற்றுகளுடன் சபா தொடர்ந்து அதிகப் பாதிப்புகளைக் கொண்ட மாநிலமாகத் திகழ்கிறது. 114 பாதிப்புகளுடன் சிலாங்கூரும், 20 பாதிப்புகளுடன் கோலாலம்பூரும் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.

இன்று, புத்ராஜெயாவில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், 580 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியதாக டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இதற்கிடையே, 102 நோயாளிகள் அவசரப்பிரிவில் இருப்பதாகவும், அவர்களில் 31 பேருக்கு சுவாசக் கருவி தேவைப்படுவதாகவும் அவர் மேலும் சொன்னார்.

“இன்று 6 நோயாளிகள் மரணமடைந்துள்ளனர், ஆக, நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 199-ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் ஐவர் சபாவையும் ஒருவர் லாபுவானையும் சேர்ந்தவர்கள்.

இன்று, பிற மாநிலங்களில் பதிவாகியுள்ளப் புதியத் தொற்றுகள் :- பினாங்கில் 12, லாபுவான் மற்றும் நெகிரி செம்பிலானில் 9 , கெடா மற்றும் பேராக்கில் 7, புத்ராஜெயாவில் 6,  மலாக்காவில் 3, பஹாங் மற்றும் கிளந்தானில் 1.

இன்று, 8 புதியத் திரளைகள் சுகாதார அமைச்சால் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.