சாலைத் தடுப்புகளில் 10 வகையான கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் 

சாலைத் தடுப்புகளில் ஏற்றுக்கொள்ளப்படும் சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சு (மிட்டி) உள்ளிட்ட, முகவர் மற்றும் அமைச்சுகளின் 10 அனுமதி கடிதங்களைப் போலீசார் பட்டியலிட்டுள்ளனர்.

தேசியக் காவற்படைத் தலைவர், அக்ரில் சானி அப்துல்லா சானி ஓர் அறிக்கையில், அங்கீகரிக்கப்பட்ட துறைகளின் அடிப்படையில், அனைத்து கடிதங்களும் தொழிலாளர்கள் வீடுகளுக்கும் அவர்களின் பணியிடங்களுக்கும் இடையில் பயணிக்க, முழு கதவடைப்பு காலத்திலும் சாலை தடுப்புகளில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறினார்.

அப்பட்டியல் பின்வருமாறு :

  • சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சு (மிட்டி) : உற்பத்தி மற்றும் தொடர்புடைய சேவைகள்
  • போக்குவரத்து அமைச்சு : பொது போக்குவரத்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள்
  • வேளாண்மை மற்றும் உணவுத் துறை அமைச்சகம் (மாஃபி) : விவசாயம் / மீன்வளம் / வேளாண்மை / பெருந்தோட்டம் / பொருட்கள். சிறு தோட்ட உரிமையாளர்களுக்கு மட்டுமே மாஃபி அனுமதி கடிதங்களை வெளியிடும். மலேசிய நிறுவனங்கள் ஆணையத்தின் (எஸ்.எஸ்.எம்.) கீழ் உரிமம் பெற்றவர்கள் மிட்டியிடமிருந்து கடிதம் பெற வேண்டும்.
  • தோட்டத் தொழில்கள் மற்றும் பொருட்கள் அமைச்சு : தோட்டத் துறை மற்றும் செம்பனை, இரப்பர் மற்றும் பிற பொருட்கள் உள்ளிட்ட உற்பத்தி பொருள்கள். மலேசிய இரப்பர் வாரியம் அல்லது அமைச்சு வழங்கிய கடிதங்களைப் பயன்படுத்த வாரிய அனுமதி சீட்டு அல்லது உரிமம் கொண்டவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கிடையில், இரப்பர் அடிப்படையிலான தயாரிப்புகளின் உற்பத்தியாளர்கள் மிட்டியிடமிருந்து கடிதம் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
  • மலேசிய மத்திய வங்கி : வங்கி நிறுவனங்கள், காப்பீடு
  • பத்திர ஆணையம் : பங்கு வர்த்தகத் துறை
  • உள்ளூராட்சி மன்றம் : சிறு வணிகர்கள் / உணவு டிரக் நடத்துநர்கள்.
  • தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு : தொலைத்தொடர்பு / ஊடகம் / இடுகை / தூதஞ்சல் / ஒளிபரப்பு
  • உள்துறை அமைச்சு : அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் வழங்கும் அனைத்து கடிதங்களும் ஊழியர்களின் நடமாட்டத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன
  • காவல்துறை : சுயத்தொழில் செய்பவர்களுக்குக் காவல்துறையினரிடமிருந்து அனுமதி கடிதங்கள் வழங்கப்படும், அத்துடன் அவசர சூழல் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு எல்லை கடக்க அனுமதி வழங்கப்படும்.

அனைத்து கடிதங்களும் ஜூன் 1-க்குப் பிறகான தேதியிட்டதாக இருக்க வேண்டும் என்ற அக்ரில், காலாவதியான கடிதம் அல்லது அனுமதி இல்லாமல் பயணிப்பது சாலைத் தடுப்புகளில் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் திரும்பிச் செல்ல உத்தரவிடப்படுவார்கள் என்றார்.

அனுமதிக்கப்படாதத் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், ஆனால் சம்பளம் வழங்குவது உள்ளிட்ட சில காரணங்களுக்காக, அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது என்றால், முதலாளியின் ஆதரவு கடிதத்தோடு, ஒரு முறை மட்டுமே காவல்துறையிடமிருந்து அனுமதி பெற முடியும்.

இதற்கிடையில், சட்டத்துறை தொழிலில் இருப்பவர்களுக்கு, பிரதமர் திணைக்களத்தின் கீழ் உள்ள சட்ட விவகாரப் பிரிவு, மிட்டியின் மூலம் சட்ட நிறுவன ஊழியர்களுக்கு அனுமதி வழங்குவதற்கான பொறுப்பைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில், ரிமாண்ட் நடவடிக்கைகளுக்குத் தேவையான சட்ட வல்லுநர்கள் நீதிமன்றத்தில் இருக்க சட்ட நிறுவனங்களின் கடிதம் கொண்டிருக்க வேண்டும்.

சாலைத் தடுப்புகளைக் கடந்து செல்வதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் கடைசி நிமிட மாற்றங்களுக்குப் பிறகு, மிட்டி தவிர வேறு நிறுவனங்கள் வழங்கும் பயண அங்கீகாரக் கடிதங்களையும் ஏற்றுக்கொள்வதாக போலீசார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.