முஹைதீன் : நான் அம்னோவுக்குத் திரும்பமாட்டேன்

நேற்று நடந்த மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) தேசியக் கூட்டணி (தேகூ) பெரும் தோல்வியைப் பதிவு செய்த போதிலும், அம்னோவின் பக்கம் திரும்பும் எண்ணம் இல்லை என்று பெர்சத்து தலைவர் முகைதின் யாசின் கூறினார்.

கூட்டணி ஒருமைப்பாடு மற்றும் சிறந்த அரசாங்க ஆட்சியை ஆதரிப்பதால் இது நடந்ததாக முஹைதீன் கூறினார்.

28 மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளிலும் தேகூ போட்டியிட்ட போதிலும், மலாக்கா பிஆர்என் -இல் அதன் மோசமான அடைவுநிலை காரணமாக பெர்சத்துவைக் கலைக்க வேண்டுமென்ற, முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் ஆடம் விடுத்த அழைப்பு குறித்து அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

“லோக்மான் ஆடாம் எனது ஆலோசகராக இருந்ததற்கு நன்றி, ஆனால் மன்னிக்கவும், ஏனென்றால் நாங்கள் வெகுதூரம் இடம்பெயர்ந்துவிட்டோம், மேலும் பெர்சத்து மட்டுமல்ல, தேகூ உருவாவதற்கான கொள்கையும் அடித்தளமும் ஒரு சிறந்த அரசாங்கத்தை வழங்குவதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று நேற்று இரவு ஹோட்டல் ஹட்டன் மலாக்காவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் முஹைதின் கூறினார்.

முன்னதாக, அடுத்த பொதுத் தேர்தலில், கட்சியின் செல்வாக்கை வலுப்படுத்தவும் முஸ்லீம்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் முகைதின் மீண்டும் அம்னோவுக்குத் திரும்ப வேண்டுமென லோக்மான் பரிந்துரைத்தார்.

வெளிப்படைத்தன்மை, ஒருமைப்பாடு, ஊழலுக்கு எதிராக போராடுதல் மற்றும் அதிகார அத்துமீறல் போன்ற கொள்கைகளைத் தேகூ கடைபிடிப்பதாக முகைதின் கூறினார்.

“எனது முந்தையக் கட்சிக்குத் திரும்பும் நோக்கத்திற்காக நான் அந்தக் கொள்கைகளைக் கைவிட வேண்டுமா,” என்று அவர் மேலும் கூறினார்.

2020 டிசம்பரில், பேராக்கில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பு, ஆகஸ்டில் கூட்டாட்சி மட்டத்தில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் மாநிலத் தேர்தலுக்கு வழிவகுத்த மலாக்காவில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி ஆகியவற்றைக் குறிப்பிட்டு, கோவிட்-19 தொற்றுநோய்யின் போது மக்கள் நலன்களுக்கு முன், கட்சியை (அம்னோ) முன்னிறுத்தியவர்கள் அவர்கள் என்று பெர்சத்து தலைவர் முன்பு விவரித்தார்..

நேற்றிரவு, தேசிய முன்னணி, மலாக்கா மாநிலத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று, மகத்தான வெற்றியைப் பதிவுசெய்தது.

முன்பு 28 மாநிலத்தில் 13 இடங்களை மட்டுமே அக்கூட்டணி கொண்டிருந்தது. மசீச-வும் மஇகா-வும் 2018 பொதுத் தேர்தலில் எந்த இடத்திலும் வெற்றி பெறாத நிலையில், இம்முறை அவை சிறப்பாகச் செயல்பட்டுள்ளன.

இதற்கிடையில், தேகூ தனது தேர்தல் அறிக்கையில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் என நம்புவதாக முகைதின் கூறினார்.