இந்திய சமூகத்தின் நலனுக்காக, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக மஇகா குரல் கொடுத்தது.

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று அறிவித்த இந்திய சமூக மேம்பாட்டு அமைச்சரவையின் சிறப்புக் குழுவின் மூலம், நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் நலனுக்காக, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக மஇகா குரல் கொடுத்தது.

“மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தின் நன்மை மற்றும் வளர்ச்சிக்காக, எதிர்க்கட்சியில் உள்ள இந்தியத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற மஇகா தயாராக உள்ளது.

“எதிர்க்கட்சியைச் சேர்ந்த இந்தியத் தலைவர்களுடன் இருதரப்பு ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்று மஇகா கருதுகிறது. அமைக்கப்படும் அமைச்சரவைக் குழுவில் சேர அவர்களை அழைக்க நான் தயாராக இருக்கிறேன்.

மலேசிய இந்திய சமூக மாற்றப் பிரிவு (மித்ரா) நிதியை நிர்வகிப்பதற்கு நான் முன்மொழிந்துள்ள அறக்கட்டளையில் பங்கேற்க எதிர்க்கட்சிகளையும் நான் அழைப்பேன்” என்று மஇகா தலைவர் எஸ்ஏ விக்னேஸ்வரன் சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சியில் நடைபெற்ற மஇகா வருடாந்திர பொதுச் சபையில் செய்தியாளர்களிடம் கூறினார்

முன்னதாக, மஇகா பொதுக்குழுவில் இஸ்மாயில் தனது உரையில், இந்திய சமூக செயல்திட்டத்தை (PTMI) செயல்படுத்துவதை உறுதிசெய்ய இந்திய சமூக மேம்பாட்டு அமைச்சரவை சிறப்புக் குழு அமைக்கப்படும் என்றார்.

குறுகிய கால மற்றும் நீண்ட கால இலக்குகளை உள்ளடக்கிய PTMI, எதிர்காலத்தில் தொடங்கப்படும் என்று இஸ்மாயில் கூறினார்.

இதற்கிடையில், விக்னேஸ்வரன் தனது கொள்கை உரையில், மித்ரா நிதியை நிர்வகிக்க அரசாங்கம் ஒரு அறக்கட்டளையை அமைக்க வேண்டும் என்று கூறினார்.

“ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்களுக்கான கோடிக்கணக்கான சிறப்பு மித்ரா நிதிகள் பயன்படுத்தப்படாமல் கருவூலத்திற்குத் திரும்புவதாகச் செய்திகள் வருவதை நாங்கள் காண்கிறோம்.

“எனவே, இந்த நிதிகள் திரும்பப் பெறப்படாமல் இருக்க ஒரு அறக்கட்டளையை அமைக்க பரிந்துரைக்கிறேன், மீதமுள்ள பயன்படுத்தப்படாத நிதி இந்த அறக்கட்டளையின் மூலம் முன்னோக்கி கொண்டு வரப்படும்,” என்று அவர் கூறினார்.

மித்ரா நிதியில் சுமார் 400 மில்லியன் ரிங்கிட் அரசாங்கத்திடம் திரும்பப் பெறப்பட்டு நாட்டிலுள்ள இந்தியர்களின் பயன்பாட்டிற்காக திருப்பித் தரப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, தனியார் நிறுவனங்களுக்கு மானியம் மூலம் வழங்கப்பட்ட மித்ரா நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக புகார்கள் வந்தன, அவை தற்போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் உள்ளன .