கட்சி விட்டு கட்சி தாவும் ஜைட், ஜாஹிட் ஹமிடிக்கு ஆதரவாக மீண்டும் அம்னோவில்

BN தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி நேற்றிரவு தனது அரசியல் கோட்டையான பேராக்கில் உள்ள பாகன் டத்தோக்கில் தீபாவளி திறந்த இல்லத்தை நடத்தினார். இதில் ஜைட் இப்ராஹிம் கலந்து கொண்டார்.

அங்குக் கூடியிருந்த சுமார் 500 இந்திய வாக்காளர்களிடம் பேசிய ஜாஹிட், “BN தான் சிறந்தது” என்ற அவரது கூற்றுக்கு நம்பகத்தன்மையைக் கொடுக்க ஜைட்டின் ஊசலாடும் அரசியல் வாழ்க்கையைப் பயன்படுத்தினார்.

“ஜைட் இப்ராஹிம், எல்லாக் கட்சிகளிலும் இருந்தார். அவர் அம்னோவில் சேர்ந்தார், PKR, DAPயில் சேர்ந்தார்… இப்போது மீண்டும் அம்னோவில் இருக்கிறார்”.

“ஏனென்றால் அவர் BN மீது நம்பிக்கை வைத்திருக்கிறார், மலேசியாவில் இதைவிட சிறந்த கட்சி எதுவும் இல்லை. சிறந்தது BN ஆகும்,” என்று அவர் சைட் பார்த்துக் கூறினார், அவர் ஒரு தலையசைப்புடன் கூடிய  புன்னகையுடன் பதிலளித்தார்.

முன்னாள் அம்னோ சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜைட், அப்துல்லா அகமது படாவி நிர்வாகத்தில் நடைமுறை சட்ட அமைச்சராகவும் பணியாற்றினார்.

பல்வேறு கட்சிகளில் சேர்வதைத் தவிர, அவர் கீத்தா என்று அழைக்கப்படும் தனது சொந்தக் கட்சி த் தலைவராகவும் இருந்தார், ஆனால் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2012 இல் வெளியேறினார்.

கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதம மந்திரி நஜிப் அப்துல் ரசாக் மற்றும் 1எம்டிபி ஊழல் ஆகியவற்றை கடுமையாக விமர்சித்து வந்த ஜைட், பின்னர் நஜிப்பின் வழக்கறிஞராகச் செயல்பட்டார்.

‘கூரை, பின்கதவு அல்லது ஜன்னல் அரசு இல்லை’

இதற்கிடையில், நஜிப்பின் துணை அதிகாரியாகப் பணியாற்றியவரும், ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டவருமான ஜாஹிட், நவம்பர் 19 பொதுத் தேர்தலுக்குப் பிறகு புத்ராஜெயாவின் கட்டுப்பாட்டை BN கைப்பற்ற முடிந்தால், “பின்வாசல் அரசாங்கம்” என்ற வார்த்தை இல்லாமல் போய்விடும் என்றார்.

“BN அரசாங்கமாகும்போது, ​​கூரை, பின்கதவு அல்லது ஜன்னல் வழியாக வரும் அரசாங்கத்தை நாங்கள் விரும்பவில்லை”.

“அனைத்து மலேசியர்களாலும் ஆதரிக்கப்படும் ஒரு அரசாங்கத்தை நாங்கள் விரும்புகிறோம்,” என்று அம்னோ தலைவர் வலியுறுத்தினார்.

BN மற்றும் 2020 இல் பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தைக் கவிழ்த்த ஷெரட்டன் நடவடிக்கையில் ஒத்துழைத்தவர்கள் ஒரு “பின்கதவு அரசாங்கத்தை” அமைப்பதாக எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

BN பின்னர் முகைடின் யாசின் தலைமையிலான பெரிகத்தான் நேசனல் நிர்வாகத்தின் வீழ்ச்சியை வடிவமைத்து அம்னோ துணை தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான மற்றொரு “பின்கதவு அரசாங்கத்தை” நிறுவியது, அவர் 2018 தேர்தலுக்குப் பிறகு மூன்றாவது பிரதமரானார்.

அக்டோபர் 10ம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதிலிருந்து, ஜாஹிட் மற்றும் அவருடன் அணிசேர்ந்தவர்களின் அழுத்தம் காரணமாக, BN தேர்தலில் வெற்றி பெற்றால் தான் பிரதம மந்திரியாகத் திரும்புவேன் என்று இஸ்மாயில் பலமுறை கூறி வருகிறார்.

1995 முதல் பாகன் டத்தோவின் எம்.பி.யாக இருக்கும் ஜாஹிட், முந்தைய தேர்தல்களைப் போலல்லாமல், கடும் போட்டியை எதிர்கொள்கிறார்.

அவர் ஹராப்பானின் ஷம்சுல் இஸ்கந்தர் முகமது அகின், பெர்சத்து உச்ச சபை உறுப்பினர் டாக்டர் நிக் முகமது பைஸ் நஅமான் மற்றும் நாட்டின் இரண்டாவது துணைப் பிரதமரான டாக்டர் இஸ்மாயில் அப்துல் ரஹ்மானின் மகனான, கெராக் இன்டிபென்டென்ட் (ஜிஐ) நிறுவனர் தவ்ஃபிக் இஸ்மாயில் ஆகியோரை எதிர்கொள்கிறார்.