1.28 பில்லியன் ரிங்கிட் செலவில் முட்டை மானியம் ஜூன் வரை தொடரும்

கோழி முட்டைகளுக்கான மானியங்கள் ஜூன் 2023 வரை தொடரும், இதில் மொத்தம் 1.28 பில்லியன் ரிங்கிட் செலவாகும் என்று வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 17 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கோழி முட்டைகளுக்குத் தொடர்ந்து மானியம் வழங்குவது குறித்து உடன்பாடு எட்டப்பட்டதாக அமைச்சகம் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“நாட்டில் கோழி முட்டைகளின் விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது, அதே நேரத்தில் இலக்கு மானியங்களின் வழிமுறை மற்றும் கொள்கைகுறித்த ஆய்வு விரைவில் முடிவு செய்யப்படலாம்,” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் விநியோகம் சீரானவுடன் வெளிநாடுகளிலிருந்து கோழி முட்டைகளைக் கொண்டு வர வேண்டியதன் அவசியம் குறித்தும் மறுஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கோழி முட்டைகளை வெளி மூலங்களிலிருந்து கொண்டு வருவதற்கான முன்முயற்சி நாட்டில் விநியோகம் நிலையானதாகவும் தடையின்றியும் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு தற்காலிக நடவடிக்கையாகும்,” என்று அது கூறியது.

சந்தையில் கோழி முட்டைகளின் விநியோகத்தின் தேவையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நாட்டில் விநியோகம் முன்பு போலவே நிலையானதாக இருப்பதை உறுதி செய்வதற்காகப் பல்வேறு அணுகுமுறைகளுடன் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.