6 வயது சிறுவன் கார் ஓட்டிய வழக்கில் போலீசார் விசாரணை

கடந்த செவ்வாயன்று லங்காவியில் உள்ள ஜாலான் கம்போங் புக்கிட்  தங்காவில் ஆறு வயது சிறுவன் தனது குடும்பத்தின் காரை ஓட்டி விபத்துக்குள்ளாக்கிய சம்பவம்குறித்த விசாரணை அறிக்கையைப் போலீசார் முடிக்கும் தருவாயில் உள்ளனர்.

லங்காவி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஷாரிமன் அஷாரி கூறுகையில், மருத்துவமனையிலிருந்து மருத்துவ அறிக்கை கிடைத்தவுடன் விசாரணை அறிக்கை மாநில அரசுத் தரப்பு இயக்குநருக்கு அனுப்பப்படும் என்றார்.

“இதுவரை போலீசார் சிறுவனின் பெற்றோர் மற்றும் சம்பவ இடத்தில் இருந்த மூன்று சாட்சிகள், விபத்து நடந்த இடத்திற்குச் சென்ற ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் சிறுவனின் தாத்தா ஆகிய ஐந்து நபர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்”.

“சிறுவனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காகக் கெடா பிரிவு போலீஸ் தலைமையகத்தில் உள்ள குழந்தை நேர்காணல் மையத்திற்கு அனுப்பப்படுவார்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

வீட்டில் சிமுலேட்டரைப் பயன்படுத்தி வாகனம் ஓட்டக் கற்றுக்கொண்டதாகச் சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவையும் ஷரிமான் நிராகரித்தார்.

அவரது வீட்டில் சிமுலேட்டர்கள் எதுவும் இல்லை என்றும், வைரல் வீடியோ மற்றும் புகைப்படங்கள் விபத்தில் சிக்கிய டொயோட்டா வியோஸ் காரை ஓட்டிய சிறுவனின்து அல்ல என்றும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தனது தந்தை எப்படி வாகனம் ஓட்டுகிறார் என்பதை கவனித்ததோடு, யூடியூப் பார்த்து வாகனம் ஓட்டக் கற்றுக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

விளக்கு கம்பத்தில் மோதுவதற்கு முன்பு சிறுவன் சுமார் 2.5 கி.மீத்தூரம் காரை ஓட்டியதாகக் கூறப்படுகிறது. அவரது கன்னத்தில் காயம் ஏற்பட்டது, அதே நேரத்தில் காரில் இருந்த அவரது மூன்று வயது சகோதரருக்குக் காயம் ஏற்படவில்லை.