இரண்டு பெர்சத்து எம்பிக்கள் பிரதமரை ஆதரிக்கின்றனர், நீதிமன்றத்தில் கட்சியை எதிர்த்துப் போராடவும், இடங்களைக் காலி செய்யவும் தயாராக உள்ளனர்

முன்னதாகப் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த பெர்சத்து எம்.பி.க்களில் 6 பேரில் இருவர், தங்களின் செயல் சட்டத்திற்கு எதிரானது என நீதிமன்றம் கருதினால், தங்கள் இடங்களைக் காலி செய்யத் தயாராக உள்ளனர்.

கட்சியை விட்டு வெளியேறாமல் அன்வாருக்கு ஆதரவாக மாறிய எம்.பி.க்களுக்கு எதிராகச் செயல்படும் வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்தும் பெர்சாத்துவின் நடவடிக்கைகுறித்து கருத்து தெரிவிக்கும்போது புக்கிட் கந்தாங் எம்.பி சையத் அபு ஹுசின் ஹபீஸ் சையத் அபு பசல் மற்றும் அவரது குவா முசாங் பிரதிநிதி முகமட் அஜிசி அபு நைம் ஆகியோர் இவ்வாறு தெரிவித்தனர்.

“கட்சி எம்.பி.க்கள் இனி பிரதமருக்கு ஆதரவளிக்க முடியாத வகையில் பெர்சத்து தலைமை கட்சி அரசியலமைப்பை திருத்துகிறது”.

“முன்பு, கட்சியின் அரசியலமைப்பில், பெர்சத்துவைத் தவிர வேறு யாரையாவது ஆதரித்தால், ஒரு சட்டமியற்றுபவர் அவரது பதவியை இழக்க நேரிடும் என்று எந்தப் பிரிவும் இல்லை. நாங்கள் பிரதமரை ஆதரிக்கிறோம், எனவே திருத்தத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்று பார்ப்போம்,” என்று சையத் ஹுசின் (மேலே, இடது) இன்று  நாடாளுமன்றத்தின் லாபியில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மேலும் அவரைப் பொறுத்தவரை, சட்டமியற்றுபவர்கள் (அன்வாரை ஆதரித்தவர்கள்) இந்த முடிவை நீதிமன்றத்தில் சவால் செய்யத் தயாராக உள்ளனர்.

“(நீதிமன்றத்தின்) தீர்ப்பு எங்களுக்கு ஆதரவாக இல்லை என்றால், நாங்கள் எங்கள் நாடாளுமன்ற இடங்களைக் காலி செய்யத் தயாராக இருக்கிறோம்”.

“அதைத் தொடர்ந்து வரும் இடைத்தேர்தலில் மக்கள் முடிவு செய்யட்டும்,” என்று அவர் கூறினார்.

அஜிசி தனது சக ஊழியரின் நிலைப்பாட்டை எதிரொலித்தார், அன்வாருக்கான அவர்களின் ஆதரவு எந்த விலையிலும் திரும்பப் பெறப்படாது என்பதை வலியுறுத்தினார்.

“எங்கள் இடங்களைக் காலி செய்வது உட்பட எந்த வாய்ப்பையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

தனிப்பட்ட கருத்து

எவ்வாறாயினும், இந்த நிலைப்பாடு அவர்களின் தனிப்பட்ட முடிவைப் பிரதிபலிப்பதாகவும், அன்வாரை ஆதரித்த மற்ற நான்கு பெர்சத்து எம்.பி.க்களையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் இருவரும் வலியுறுத்தினர்.

“நான் என் சார்பாகப் பேசுகிறேன். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்க்கட்சியாக இருந்தும், மக்களுக்கு எதுவும் கிடைக்காததால், பிரதமரை ஆதரிக்க முடிவு செய்தேன்,” என்றார் சையத் ஹுசின்.

சையத் ஹுசின் மற்றும் அசிசியைத் தவிர, அன்வாரை ஆதரித்த மற்ற நான்கு பெர்சாத்து எம்.பி.க்கள், சுல்கஃபேரி ஹனாபி (தஞ்சங் கராங்), ஜஹாரி கெச்சிக் (ஜெலி), இஸ்கந்தர் துல்கர்னைன் அப்துல் காலித் (குவாலா கங்சார்), மற்றும் சுஹாய் அப்துல் ரஹ் (லாபன்) ஆகியோர் ஆவர்.