ங்கா போன்ற அமைச்சர்கள் பொருளாதாரத்தை பாதிக்கின்றனர், புறக்கணிப்பு அல்ல-அக்மல்

அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் முகமது அக்மல் சலே, அவர் முன்னெடுத்த புறக்கணிப்பு பிரச்சாரங்கள் பொருளாதாரத்தை மோசமாக்குகின்றன என்பதை மறுத்தார்.

அதற்குப் பதிலாக, வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ங்கா கோர் மிங் போன்ற “முட்டாள்தனமான” அமைச்சர்களால் தான் பொருளாதாரம் மோசமாகச் செயல்படுகிறது என்று அக்மல் முகநூலில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“நஜிப் அப்துல் ரசாக்கின் காலத்தில், நாங்கள் புறக்கணிப்பு பிரச்சாரங்களை மேற்கொண்டோம், ஆனால் பொருளாதாரம் இன்னும் மேம்பட்டது”.

“ஞானமற்றநங்கா கோர் மிங்கைப் பொறுத்தவரை, உங்களைப் போன்ற அமைச்சர்கள் இருப்பதால் பொருளாதாரம் மோசமடைந்து வருகிறது,” என்றார்.

பொறுப்பற்ற கட்சிகளால் அழைக்கப்பட்ட புறக்கணிப்புகளால் உள்ளூர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நேற்று எக்ஸ்-இல் ங்கா  பதிவிட்டுள்ளார்.

“தூண்டுபவர்களின் வலையில் ஒருபோதும் விழாதீர்கள், தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த நமது நாட்டிற்கு அனைத்து கட்சிகளின் முயற்சிகளும் தேவை,” என்று அவர் கூறினார்.

அவரது இடுகையுடன் சீன ஊடக அறிக்கையின் ஸ்கிரீன் ஷாட் இணைக்கப்பட்டுள்ளது, இது வணிக புறக்கணிப்புகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் உள்ளூர் தொழிலாளர்களின் கஷ்டங்களை எடுத்துக்காட்டுகிறது.

“அல்லா” சாக்ஸ் பிரச்சினை தொடர்பாகக் கே. கே. மார்ட்டை புறக்கணிக்க அக்மல் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த மாதம், கே. கே. மார்ட்டின் பண்டார் சன்வே கடையில் “அல்லா” என்ற வார்த்தையைக் கொண்ட சாக்ஸ் விற்பனை செய்யப்படும் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி, சலசலப்பைத் தூண்டின.

கே. கே. மார்ட் உடனடியாகத் தனது அனைத்து வாடிக்கையாளர்களிடமும், குறிப்பாக முஸ்லீம் சமூகத்திடம் மன்னிப்பு கேட்டு, சாக்ஸ் விற்பனையை நிறுத்தியது.

மன்னிப்பு கேட்டபோதிலும், கே. கே. மார்ட் புறக்கணிப்பு தொடர வேண்டும் என்று அக்மல் வலியுறுத்தினார்.