ராயா பண்டிகையின்போது சரக்கு வாகனங்கள் ஓட்டுவதற்கு தடை விதிக்க RTD நடவடிக்கை

மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும், ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளிலும் ஹரி ராயா பண்டிகைக் காலத்தில், போக்குவரத்து நெரிசலை எளிதாக்கவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், சரக்கு வாகனங்களுக்குத் தற்காலிக தடையைச் சாலைப் போக்குவரத்துத் துறை (RTD) விதிக்கும்.

போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறுகையில், இந்த நடவடிக்கை, குறிப்பாகச் சொந்த ஊர்களுக்குச் செல்லும் தனியார் வாகனங்களால் எதிர்பார்க்கப்படும் போக்குவரத்து அதிகரிப்பை ஈடுசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் சாலை விபத்துகளின் அபாயத்தைக் குறைக்கிறது.

“போக்குவரத்து அமைச்சகமும் RTDயும் அனைத்து சரக்கு வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களையும் இந்தக் கட்டுப்பாட்டிற்கு இணங்குமாறு கேட்டுக்கொள்கின்றன”.

“அவ்வாறு செய்யத் தவறினால் ரிம 300 அபராதம் அல்லது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டால் ரிம 2,000 வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்,” என்று அவர் இன்று செமெனியில் அமலாக்க அதிகாரிகளுடன் RTD சிறப்பு நடவடிக்கை நிகழ்ச்சி மற்றும் உண்ணாவிரத நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாகத் தனது உரையில், சமீபத்திய சீனப் புத்தாண்டின்போது நடத்தப்பட்ட அமலாக்க முயற்சிகள் மற்றும் சிறப்பு நடவடிக்கைகளால் சாலை விபத்துகள் 10 சதவீதம் குறைந்துள்ளதாகவும், முந்தைய ஆண்டில் 8,784 ஆக இருந்த விபத்துகளுடன் ஒப்பிடும்போது 7,882 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் லோக் எடுத்துரைத்தார்.

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஹரி ராயா ஐடில்ஃபிட்ரி 2025 சிறப்பு நடவடிக்கை மார்ச் 24 முதல் ஏப்ரல் 8 வரை நாடு தழுவிய அளவில் செயல்படுத்தப்படும்.

“போக்குவரத்து சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறும் சாலை பயனர்களைக் கண்காணித்தல், கண்டறிதல் மற்றும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் இந்த நடவடிக்கை கவனம் செலுத்தும்,” என்று அவர் கூறினார்.

பண்டிகை காலம் முழுவதும் சாலைப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும், போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்கவும் வாகன ஓட்டிகளுக்கு லோக் நினைவூட்டினார்.

“பொதுமக்கள் போக்குவரத்து விதிமீறல்களை MyJPJ செயலி (e-Aduan@jpj) மூலமாகவோ அல்லது RTDயின் அதிகாரப்பூர்வ புகார் மின்னஞ்சல் [email protected] மூலமாகவோ புகாரளிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.