நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்க, மருந்து விலை வெளிப்படைத்தன்மை பொறிமுறையை அரசாங்கம் தாமதமின்றி செயல்படுத்த வேண்டும் என்று ஒரு அரசு சாரா நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் பொதுமக்களின் சுமையைக் குறைக்க உதவும் இந்த வழிமுறையைச் செயல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அமைப்பு வரவேற்பதாக டெராஸ் பெங்குபயான் மலாயு தலைவர் அஸ்மி அப்துல் ஹமீத்(Teras Pengupayaan Melayu president Azmi Abdul Hamid) கூறினார்.
“மருந்து விலை வெளிப்படைத்தன்மை பிரச்சினை நீண்ட காலமாகத் தாமதமாகி வருகிறது. நவீன மருந்துத் தொழில் நீண்ட காலமாக நுகர்வோருக்கான அடிப்படை சுகாதாரத் தரங்களைப் பராமரிப்பதில் மறுக்க முடியாத பங்கைக் கொண்டிருந்தாலும், நுகர்வோர் தேவைகள் என்ற போர்வையில் லாபத்தை ஈட்டுவதற்காகத் தொழில்துறையால் அறியாமலேயே சுரண்டப்படுகிறது”.
“2018 முதல் ஒத்திவைக்கப்பட்ட இந்த வழிமுறை, மருந்துகள்மீதான கட்டுப்பாட்டையும் மொத்த விற்பனையாளர்களால் மருந்து விலைகளை அறிவிப்பதையும் உறுதி செய்வதற்காகச் செயல்படுகிறது”.
“இந்தத் தாமதம் காரணமாக, தனியார் மருத்துவமனைகளில் மருந்து விலைகள் சமூக மருத்துவமனைகள் மற்றும் பொது மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது குறைவாகவே வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாறிவிட்டன,” என்று அஸ்மி இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினை மலேசியாவின் சுகாதாரப் பணவீக்க விகிதம் உலக சராசரியை விட 15 சதவீதத்தையும், ஆசிய-பசிபிக் சராசரியை 10 சதவீதத்தையும் தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் தாண்டியதற்கு பங்களித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சந்தையில் மருந்து விலை வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், சுகாதாரப் பராமரிப்பு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், நுகர்வோர் தேர்வை மேம்படுத்துவதற்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு இந்த வழிமுறையைச் செயல்படுத்துவது அவசியம்.
“விலை வெளிப்படைத்தன்மை, விற்பனை நிலையங்களுக்கு இடையிலான விலை ஏற்றத்தாழ்வுகளைத் தடுப்பது, ஆரோக்கியமான போட்டியை ஊக்குவித்தல், நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்தை எளிதாக்குவதற்கு மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் கட்டாய மருந்து விலைக் காட்சிகள் மிக முக்கியமானவை,” என்று அவர் வலியுறுத்தினார்.