பேராக் மாநிலம் தைப்பிங்கில் உள்ள ஒரு தனியார் மொழிபெயர்ப்பாளர், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இணையத்தில் இயங்கிவரும் போலியான கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டு, மொத்தம் ரிம 572,130 இழப்பைச் சந்தித்துள்ளார்.
நேற்று மாலை 4.19 மணிக்குப் பாதிக்கப்பட்ட 40 வயதுடைய பெண்ணிடமிருந்து புகார் கிடைத்ததாகத் தைப்பிங் காவல்துறைத் தலைவர் நசீர் இஸ்மாயில் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவரை ஆகஸ்ட் 10 ஆம் தேதி இன்ஸ்டாகிராம் வழியாக “Yang Yuting” என்ற சீன நாட்டவர் என்று அடையாளம் காட்டிக் கொண்ட ஒருவர் தொடர்பு கொண்டு, பின்னர் அவர்களின் உரையாடலை வாட்ஸ்அப்பிற்கு மாற்றியதாகத் தெரியவந்துள்ளது.
“சந்தேக நபர் பாதிக்கப்பட்டவருக்கு 20 சதவிகிதம் அதிக வருமானத்தை உறுதியளிக்கும் ஒரு குறிப்பிட்ட கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதாகத் தெரிவித்தார்”.
“சந்தேக நபரின் விளக்கத்தைக் கேட்டபிறகு, பாதிக்கப்பட்டவர் ஆர்வம் காட்டி பங்கேற்க ஒப்புக்கொண்டார்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பின்னர் சந்தேக நபர் எவ்வாறு முதலீடு செய்வது என்பது குறித்த வழிமுறைகளுடன் ஒரு இணைப்பை அனுப்பியதாக நசீர் கூறினார்.
“பாதிக்கப்பட்டவர் ரிம 8,740 ஆரம்ப முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆகஸ்ட் 22 அன்று, அவர் அந்தத் தொகையை ஆன்லைனில் ஒரு நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்றினார், மேலும் ரிம 9,595 திரும்பப் பெற்றார்”.
“லாபகரமான வருமானத்தைக் கண்ட பாதிக்கப்பட்டவர், ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 5, 2025 வரை தனது முதலீடுகளைக் கணிசமாக அதிகரித்து, ஒன்பது வெவ்வேறு கணக்குகளுக்கு 12 ஆன்லைன் பரிமாற்றங்கள்மூலம் மொத்தம் ரிம 572,130 திரட்டினார்,” என்று அவர் கூறினார்.
பரிவர்த்தனைகளை முடித்தபிறகு, சந்தேக நபர் மேலும் வைப்புத்தொகையைக் கோரியதாக நசீர் மேலும் கூறினார்.
அப்பெண் அதிக நிதி வழங்க முடியாதபோது, வங்கிக் கடனைப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், அவ்வாறு செய்ய மறுத்து, போலீசில் புகார் அளித்தார்.
மோசடி குற்றத்திற்காகக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

























