நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் சுங்கக் கட்டணத்தில் 50% தள்ளுபடி வழங்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார்.
இந்த நடவடிக்கையின் காரணமாக, சுங்கச்சாவடி சலுகை நிறுவனங்களுக்கு ஈட்டுத்தொகையாக வழங்க அரசாங்கத்திற்கு சுமார் 21.03 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என்று அவர் கூறினார்.
இந்தத் தள்ளுபடி மார்ச் 18-ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணிக்குத் தொடங்கி, மார்ச் 19-ஆம் தேதி இரவு 11.59 மணிக்கு முடிவடையும்.
இது முதல் வகுப்பு தனியார் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், நாட்டின் எல்லைகளில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் (BSI) மற்றும் தஞ்சோங் குப்பாங் சுங்கச்சாவடிகளுக்கு இந்தத் தள்ளுபடி பொருந்தாது.
ஒரு அறிக்கையில், ஈகைத் திருநாளை முன்னிட்டு 4,000 நபர்களை, குறிப்பாகத் தனித்துப் வாழும் பெற்றோர்களை, திவால் நிலையிலிருந்து விடுவிக்கும் நடவடிக்கையைத் திவால் துறை விரைவுபடுத்தும் என்றும் அன்வார் அறிவித்தார்.
நோன்புப் பெருநாளை பொது விடுமுறை, இரண்டாம் கட்ட ‘சும்பங்கான் துனாய் ரஹ்மா’ நிதியுதவி முன்கூட்டியே வழங்கப்படுவது மற்றும் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு ரொக்க உதவி போன்றவற்றுடன், மலேசியர்கள் இந்த பண்டிகைக் காலத்தைக் கொண்டாட உதவும் கூடுதல் முன்முயற்சிகள் இவை என்று அவர் கூறினார்.
“அதே வேளையில், ஈகைத் திருநாளைக் கொண்டாடும் மலேசியர்கள் சிக்கனமாகச் செலவு செய்யுமாறு நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், அனைவரும் தங்கள் நிதி நிர்வாகத்தில் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
-fmt
























