வணிகப் பகுதிகளில் முஸ்லிமல்லாதோரின் வழிபாட்டுத் தலங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான 2025-ஆம் ஆண்டின் வழிகாட்டுதல்கள், வருங்கால மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், தற்போதுள்ள வணிக மண்டலங்களைப் பாதிக்காது என்றும் சிலாங்கூர் மாநில அரசு தெரிவித்துள்ளது.
பௌத்த, கிறித்தவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோயிச மத விவகாரங்களுக்கான சிறப்புக் குழு (Limas), இந்த வழிகாட்டுதல்கள் புதிய மேம்பாட்டுப் பகுதிகளைத் திட்டமிடுவதை எளிதாக்குவதற்காக உருவாக்கப்பட்டவை என்றும், இதன் மூலம் வழிபாட்டுத் தலங்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் அமைவதை உறுதி செய்ய முடியும் என்றும் கூறியுள்ளது.
இன்று நடைபெற்ற கூட்டத்தில், முஸ்லிமல்லாத மதச் சங்கங்களுக்கு இந்த உறுதிமொழியை வழங்கியதாக இக்குழுவின் தலைவர்கள் ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இக்கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், நகர் மற்றும் ஊரமைப்புத் துறை இயக்குநர் மற்றும் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கின்றாரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான், செகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் சூ லிம் மற்றும் பாந்திங் சட்டமன்ற உறுப்பினர் வி. பாப்பாராயுடு ஆகியோர், உள்ளூர் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சில மத வழிபாட்டுத் தலங்கள் வேண்டுமென்றே தொழில்பேட்டை அல்லது வணிக மண்டலங்களில் உள்ள இடங்களைத் தேர்ந்தெடுக்கின்றன என்பதை ஒப்புக்கொண்டனர்.
“இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, புதிய பகுதிகளில் உள்ள வணிகக் கட்டடங்களை வழிபாட்டுத் தலங்களாகப் பயன்படுத்துவதற்கு மாநில அரசு இடம் ஒதுக்க வேண்டும் என்று அச்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இது திட்டமிடல் அனுமதி நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பதோடு, உள்ளாட்சி அமைப்புகளால் ஒவ்வொரு வழக்கின் அடிப்படையிலும் (case-by-case basis) சாதகமாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது”.
“மேலும், புதிய சங்கங்களின் வசதிக்காக திட்டமிடல் அனுமதி செயல்முறையை எளிதாக்குமாறும் அங்கு வந்திருந்த சங்கங்கள் கேட்டுக்கொண்டன,” என்று அவர்கள் கூறினர்.
இந்தக் கோரிக்கைகளுக்குக் குழு உடனடியாகப் பதிலளிக்க உறுதியளிக்கவில்லை என்றாலும், இஸ்லாத்தை கூட்டரசு மதமாக அறிவிக்கும் அதே வேளையில், முஸ்லிமல்லாதவர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமையை உறுதி செய்யும் கூட்டரசு அரசியலமைப்பின் 3 மற்றும் 11-ஆவது பிரிவுகளை அது மீண்டும் உறுதிப்படுத்தியது.
“இந்த வழிகாட்டுதல்களை மேம்படுத்தவும், அவை அனைவரையும் உள்ளடக்கியதாகத் தொடரவும், சிலாங்கூர் மக்கள் எப்போதும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நல்லிணக்கத்துடன் வாழ வழிவகை செய்யவும், சம்பந்தப்பட்ட மதச் சங்கங்களுடன் லிமாஸ் குழு நெருக்கமாகப் பணியாற்றி கருத்துக்களைப் பெறும்,” என்று அது மேலும் சேர்த்துக் கொண்டது.
கடந்த வாரம், பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங், 2025 நவம்பர் 12 அன்று நடைபெற்ற மாநில எக்சோ (State Exco) கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட இந்த வழிகாட்டுதல்களில் உள்ள இரண்டு விதிகள் குறித்து கவலை தெரிவித்தார். இவை சிலாங்கூர் முழுவதும் மத நடவடிக்கைகளைப் பின்பற்றுவதில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கூறினார்.
“KM: 4-3 இஸ்லாம் அல்லாத பிற வழிபாட்டுத் தலங்கள்” என்பதன் கீழ் உள்ள 6-ஆவது பத்தி, “வணிக மண்டலங்களாக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வழிபாட்டுத் தலங்களை அமைக்க அனுமதி இல்லை,” என்று குறிப்பிடுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், 7-ஆவது பத்தி, “தற்போதுள்ள கட்டடங்களை இதுபோன்ற பயன்பாட்டிற்கு (வழிபாட்டுத் தலங்களாக) மாற்றுவதற்கு அனுமதி இல்லை,” என்று கூறுகிறது.
இதற்குப் பதிலளித்த ஸீ ஹான், இந்த வழிகாட்டுதல்கள் மதச் சங்கங்களுடன் கலந்தாலோசித்து மறுபரிசீலனை செய்யப்பட உள்ளதால், மாநில அரசு இன்னும் இவற்றை அமல்படுத்தவோ அல்லது கட்டாயமாக்கவோ இல்லை என்று கூறினார்.























