நஜிப் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதை பிகேஆர் குறை கூறுகிறது

பிஎன் கடந்த காலத்தில் செய்த தவறுகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல் அதற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மன்னிப்புக் கேட்பதில் அர்த்தமில்லை என பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் கூறுகிறார்.

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனச் சர்ச்சை போன்ற பொது நிதி முறைகேடுகள், ஊழல் ஆகியவற்றை சமாளிப்பதற்கு நஜிப் இப்போது முன்னுரிமை கொடுக்க வேண்டும் என சைபுடின் நேற்றிரவு சுங்கைப் பட்டாணியில் செராமா நிகழ்வு ஒன்றில் கூறினார்.

மன்னிப்புக் கேட்டாலும் கேட்காவிட்டாலும் பிஎன் தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பக்காத்தான் ராக்யாட் ஆட்சிக்கு வருமானால் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய ஊழல் அரசு அதிகாரிகள் மீது அது நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் சொன்னார்.

“நாங்கள் வரும் தேர்தலில் புத்ராஜெயாவைக் கைப்பற்றினால் அவர்களை விசாரிக்கப்படுவதற்காக நீதி மன்றத்துக்குக் கொண்டு செல்வோம்,” என அவர் எச்சரித்த போது கூட்டத்தினர் பெருத்த ஆரவாரம் செய்தனர்.

சைபுடின் கெடா மெர்போக்கில் தாமான் கெலாடியில் கூடியிருந்த 3,000க்கும் மேற்பட்ட மக்களிடையே உரையாற்றினார்

அதற்கு சில மணி நேரம் முன்னதாக கெடா பாலிங்-கில் உரையாற்றிய நஜிப், பிஎன் கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

2008ம் ஆண்டு தேர்தலில் சிலாங்கூரிலும் கெடாவிலும் பிஎன் தோல்வி காண்பதற்கு வழி வகுத்த பிஎன் தவறுகள்  மீது நஜிப் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருப்பது இது இரண்டாவது முறையாகும்.

சிலாங்கூர் போர்ட் கிளாங்கில் பிப்ரவரி 26ம் தேதி முதன் முறையாக அவ்வாறு கேட்டுக் கொண்டார்.

2008ம் ஆண்டு சிலாங்கூர், கெடா, மற்றும் மூன்று மாநிலங்களில் வாக்காளர்கள் பிஎன் -னைத் ‘தண்டித்த போதிலும்’ அடுத்த பொதுத் தேர்தலில் நஜிப்பைத் தண்டிப்பதற்கு நல்ல வாய்ப்பு என்றார் சைபுடின்.