ஆபாச அரசியல் வேண்டாம்; அன்வார் அறிவுறுத்து

[19.09.2011 – தமிழ்நேசன்]

“நாட்டின் மிகப்பெரிய பிரச்னைகளான பொருளாதாரப் பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, சின்னஞ்சிறு ஆபாச அரசியலை எமது எதிரிகள் கட்டவிழ்த்து விடுகின்றனர். இத்தகைய தந்திரங்களுக்கு பக்காத்தான் ராக்யாட் பலியாகாது. நாம் தொடர்ந்து சமுதாய – பொருளாதாரப் பிரச்னைகளின் மீதுதான் தீவிரகவனம் செலுத்துவோம்!” என பி.கே.ஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சூளுரைத்திருக்கிறார்.

பிரதமரின் அரசில் சீரமைப்புப் பிரகடனத்திற்குப் பிறகும், தான் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் புதிய வீடியோ வெளிவந்ததற்குப் பிறகு நடத்திய முதலாவது கூட்டத்தில் நேற்று உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“அடுத்த பொதுத்தேர்தலைக் கவனத்தில் கொண்டு செய்யப்படும் அழுக்கடைந்த அரசியல் பிரச்னைகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்க நாம் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக சமுதாயப் பொருளாதாரப் பிரச்னைகளில் நாம் கவனம் செலுத்த விரும்புகிறோம்” என்றார்.