கெடா எம்பி: மெர்செடிஸ் எனக்காக அல்ல; விருந்தினருக்காக

கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக், மாநில அரசு வாங்கிய மெர்செடிஸ் பென்ஸ் எஸ்350 கார் தமக்காக அல்லவென்றும் கெடாவுக்கு வருகை புரியும் விருந்தினர்களுக்காக அது வாங்கப்பட்டது என்றும் விளக்கமளித்துள்ளார்.

டாக்டர் மகாதிர் முகம்மட் கெடாவுக்கு வருகை மேற்கொண்டபோதும் ஜோகூர் பட்டத்திளவரசர் கோலா நெராங்கில் ஒருவாரம் பயிற்சியில் கலந்துகொண்டபோதும் அக்கார் அவர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது என்று அசிசான் கூறியதாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது.

“நாங்கள், கார் வாங்கியது உண்மைதான்.அது எனக்காக மட்டுமல்ல,  மாநிலத்துக்கு வரும் பெருமக்கள் பயன்படுத்திக்கொள்ளவும்தான் வாங்கப்பட்டது.நான், அரசு முன்பு வாங்கிய பழைய KBV 8 -டைத்தான் பயன்படுத்துகிறேன்.அடிக்கடி பழுதாகி விடுகிறது.என்றாலும் அதைப் பயன்படுத்தவே விரும்புகிறேன்”, என்றார்.

காரை அவர் ஒளித்து வைத்திருக்கிறார் என்று கூறப்படுவதையும் மந்திரி புசார் மறுத்தார். அது அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது என்றும் பிரமுகர்களின் அதிகாரப்பூர்வ காராகவே அது பெரும்பாலும் பயன்படுகிறது என்றும் சொன்னார்.

ஐந்து டொயோட்டா கேம்ரிகளும் நான்கு டோயோட்டா போர்ச்சுனரும் பழுதடைந்த வாகனங்களுக்குப் பதிலாக வாங்கப்பட்டவை என்றாரவர்.

அசிசான் கோலாலம்பூரில் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளுக்குப் பறப்பதைவிட காரில்  செல்வதையே விரும்புகிறார்.பயணம் தடைப்படக்கூடாது என்பதற்காக இரண்டு கார்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்.

முன்னதாக கெராக்கான் இளைஞர் டான் கெங் லியாங், அசிசான் புதிய கார் வாங்க மக்கள் பணத்தில் ரிம850,000 வாரி இறைத்தார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

TAGS: