மலேசியாவின் முதலாவது ஒலிம்பிக் தங்கத்தைக் கொண்டுவருவாரா சொங் வெய்?

நாட்டின் முதலாவது ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வெல்லும் கட்டத்தில் உள்ள பெட்மிண்டன் வீரர் லீ சொங் வெய்க்கு ஆதரவு தெரிவிக்க மலேசியர்கள் ஒன்றுதிரள வேண்டும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

சீனாவின் சென் லொங்கை 21-13,21-14 என்ற புள்ளிகளில் வென்ற லீ, தங்கம் வெல்வதற்கான மனத்திடத்தையும் உணர்வையும் பெற்றிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

லீ, நாளை இறுதி ஆட்டத்தில்  சீனாவின் இன்னொரு ஆட்டக்காரரான லின் டானைச் சந்திக்கிறார்.

“மலேசிய மக்கள் அவருக்கு ஆதரவையும் ஊக்கத்தையும் கொடுப்பார்கள். மலேசியாவுக்காக வெற்றிபெற வேண்டும் என்று அவரிடம் கூறியிருக்கிறேன்”, என்று பெக்கானில், செய்தியாளர்களிடம் நஜிப் தெரிவித்தார்.

இதனிடையே, லீக்கு ஊக்கமளிக்க பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் இன்றிரவு லண்டன் புறப்படுகிறார்.

மலேசிய பெட்மிண்டன் சங்கப் புரவலருமான ரோஸ்மா, சொங் வெய்-இன் வெற்றிக்கு வேண்டிக்கொள்ளுமாறு மலேசியர்களைக் கேட்டுக்கொண்டார்.

-பெர்னாமா